பரங்கிப்பேட்டை தேர்தல் அதிகாரி அனுமதியின்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு பிரசாரம் செய்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். பிரசாரத்திற்கு பயன்படுத்திய டாடா சுமோ கார் பறிமுதல் செய்யப்பட்டது. சிதம்பரம் லோக்சபா தொகுதி பரங்கிப்பேட்டை பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சி சார்பில் டாடா சுமோ காரில் மைக் மூலம் பிரசாரம் செய்யப்பட்டது. பரங்கிப்பேட்டை போலீசார் டாடா சுமோ காரை நிறுத்தி விசாரித்தபோது தேர்தல் அலுவலர் அனுமதியின்றி பிரசாரம் செய்வது தெரிய வந்தது. அதையடுத்து மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சலீம்முதீன் (45), சுமோ டிரைவர் சதீஷ் (25) இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து, பிரசாரத்திற்கு பயன்படுத்திய டாடா சுமோ காரை பறிமுதல் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கோடை கால சிறப்பு ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை வரும் 29ம் தேதி நடக்கிறது. கடலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ராமலிங்கம், செயலாளர் சந்திரமோகன் பவுள் ராஜ், பொருளாளர் சங்கர நாராயணன்,மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர் கருணாகரன், பயிற்சியாளர் அமரேளதர் குமார் பிரிச்சா பங்கேற்றனர். கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் முறையாக ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி வகுப்பு துவங்க முடிவு செய்யப்பட்டது. இதில் 3 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவர். பயிற்சிக்கான சேர்க்கை வரும் 29ம் தேதி முதல் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கிறது. ஸ்கேட்டிங் விளையாட்டினை பள்ளிகளில் அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
Source: தினமலர்