புதன், 22 ஏப்ரல், 2009

விளையாட்டுப் பள்ளிகளில் சேர இலவச விண்ணப்பம் வினியோகம்

தமிழகத்தில் உள்ள 18 விளையாட்டுப் பள்ளிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், அப்பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழகத்தில் 18 இடங்களில் விளையாட்டுப் பள்ளி விடுதிகள் மூலம் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி வருகிறது.

இவற்றில் 860 மாணவ-மாணவிகள் கல்வியுடன் நவீன விளையாட்டுப் பயிற்சியும் பெற்று வருகின்றனர்.

வரும் 2009-10ம் ஆண்டிற்கான புதிய மாணவ-மாணவிகள் தேர்வு, 385 ஊராட்சி ஒன்றியங்களில் வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடக்கிறது.

இதற்கான விண்ணப்பங்கள், அனைத்து விளையாட்டுப் பள்ளிகளிலும் இலவசமாகக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் இடம் மற்றும் கால அட்டவணையை வெளியிட்டுள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய அளவில் தேர்வுபெறும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வரும் மே மாதம் 9, 10ம் தேதிகளில் மண்டல அளவிலான தேர்வுகள் திருச்சி, திருவண்ணாமலை, மதுரை, ஈரோடு ஆகிய இடங்களில் நடக்கும்.

மாணவர்களுக்கு மாநில அளவிலான தேர்வுகள், திருச்சியில் மே மாதம் 18ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கும்.

மாணவிகளுக்கு எல்லா விளையாட்டுகளுக்குமான மாநில அளவிலான தேர்வுகள், திருவண்ணாமலையில் மே மாதம் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக