ரிசர்வ் வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரிசர்வ் வங்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 மே, 2009

2011-ம் ஆண்டுக்குள் நாட்டில் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமங்களில் வங்கி கிளைகள் திறக்கப்படும்! ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பேட்டி!!

வரும் 2011-ம் ஆண்டுக்குள், நம் நாட்டில் 2 ஆயிரம் பேர் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் வங்கி கிளைகள் திறக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோரட் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் மும்பையில் உள்ளது.

அங்கிருந்தபடி, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோரட், இந்தியா முழுவதிலும் பல்வேறு ஊர்களிலும் உள்ள நிருபர்களுக்கு `டெலி கான்பரன்சிங்' மூலமாக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு கொண்டு செல்ல `முன்னோடி வங்கி' திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசு வங்கிகள், நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வசிக்கும் மக்களுக்கு அரசின் நிதி உதவி திட்டங்களின் பயனை பெறும் வகையில் கடன்களை வழங்கி உதவி வருகின்றன.

இத்தகைய வங்கிகள் முன்னோடி வங்கிகள் (லீட் பேங்க்ஸ்) என்றழைக்கப்படுகின்றன.

இந்த வங்கிகளின் செயல்பாட்டினை மேலும் செம்மைப்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், மற்றும் அசாம், குஜராத் உள்பட 3 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர், நீண்ட ஆலோசனைக்கு பிறகு, பல்வேறு பரிந்துரைகளை தயாரித்துள்ளார்கள்.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக, நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரின் கருத்தை அறிய திட்டமிட்டுள்ளோம்.

அடித்தட்டு மக்களையும் சென்றடையும் உள்ளூர் பத்திரிகைகள், இந்த வரைவு அறிக்கையின் மீதான கருத்தையும், ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டும்.

இது தவிர, ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலும் இந்த அறிக்கை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதை படித்துப் பார்த்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறலாம்.

நாட்டில் கடைகோடியில் உள்ள மக்களையும் பொருளாதார வளர்ச்சியும், அதை சார்ந்த திட்டங்களும், இந்த முன்னோடி வங்கிகள் மூலமாக சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.

இதுபோல், நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் வங்கி கிளைகளை தொடங்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம். அது எளிதானதல்ல.

எனவே, 2 ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிராமங்களிலாவது வரும் 2011-ம் ஆண்டுக்குள் வங்கி கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு உஷா தோரட் தெரிவித்தார்.

சென்னையில் இந்த டெலி கான்பரன்சிங்குக்கு ஏற்பாடுகளை செய்த ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எப்.ஆர். ஜோசப் கூறுகையில்,

``தமிழகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய அரசுத்துறை வங்கிகள், முன்னோடி வங்கிகளாக செயல்பட்டு வருகின்றன. இதன்படி ஒவ்வொரு வங்கியின் கட்டுப்பாட்டிலும் சில மாவட்டங்கள் உள்ளன.

இந்த வங்கிகள் மூலமாக மக்களுக்கு நிதியுதவி திட்டங்கள் சிறப்பாக சென்றடைவதற்காக மாவட்ட கலெக்டர், முன்னோடி வங்கியின் அதிகாரி, நபார்டு வங்கி அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன'' என்று கூறினார்.

புதன், 1 ஏப்ரல், 2009

மற்ற வங்கி ஏ.டி.எம்.,ல் இனி கட்டணமின்றி பணம் எடுக்கலாம்

ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கு இனி தயங்க வேண்டியது இல்லை. மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களை பயன்படுத்துவதற்கு இன்று முதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

குறிப்பிட்ட ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் மூலமாக பண பரிமாற்றம் செய்தால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஒரு பண பரிமாற்றத்துக்கு 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால், சாதாரண மற்றும் நடுத்த வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர்.

இதையடுத்து, பண பரிமாற்றத்துக்கு எந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இருந்தாலும், அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களையும் கட்டணமின்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் எந்தவித தயக்கமும் இன்றி பண பரிமாற்றம் செய்யலாம். இதற்காக, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

இதன் எதிரொலியாக, சில வங்கிகள் தங்களது ஏ.டி.எம்., மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. ஓரியண்டல் வணிக வங்கி நிர்வாக இயக்குனர் சின்கா கூறுகையில், 'நாடு முழுவதும் புதிதாக 60 ஏ.டி.எம்.,களை திறக்க முடிவு செய்துள்ளோம்'என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'ரிசர்வ் வங்கி என்ன விதிமுறைகளை வரையறுத்துள்ளதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்' என்றார்.