செவ்வாய், 30 டிசம்பர், 2008

அக்கம் பக்கம்: இப்படித்தான் இருக்கவேணும் பொம்பள!?

பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவருக்கு பயணிகள் தர்ம அடி கொடுத்தனர். கடலூர் பஸ் நிலையத்தில் அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரபீக். இவர் அங்கு பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மகள் சமீமா(வயது 17, பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமீமா கடந்த 27-ந் தேதி புதுச்சேரியில் இருந்து காயல்பட்டினம் புறப்பட்டார். உடன் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் நண்பர்கள் சிலரும் சென்றனர்.

திருமணம் முடிந்து நேற்று முன்தினம் சமீமா தனது நண்பர்களுடன் ஊர் திரும்பினார். திருச்செந்தூரில் இருந்து புதுச்சேரி வரும் அரசு பஸ்சில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். பஸ்சை டிரைவர் முருகேசன்(39) என்பவர் ஓட்டினார். இவர் திருச்செந்தூரை சேர்ந்தவர். செஞ்சி முத்து தெருவை சேர்ந்த ராஜா(42) என்பவர் கண்டக்டராக இருந்தார்.

பஸ்சை டிரைவரும், கண்டக்டரும் மாறி மாறி ஓட்டி வந்தனர். திருச்சி வந்ததும் கண்டக்டர் ராஜா பஸ்சை ஓட்டினார். டிரைவர் முருகேசன் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுத்தார். அவருக்கு முன் இருக்கையில் மாணவி சமீமா அமர்ந்திருந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு முன் இருக்கையில் அமர்ந்திருந்த சமீமாவிடம் டிரைவர் முருகேசன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சமீமா டிரைவரை எச்சரித்தார். மேலும் இதுபற்றி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.

இதை அடுத்து சமீமாவின் உறவினர்கள் நேற்று அதிகாலையில் கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது திருச்செந்தூர்-புதுச்சேரி பஸ் அங்கே வந்து நின்றதும். அதில் இருந்து இறங்கிய மாணவி சமீமா அழுதபடியே தனது உறவினர்களை நோக்கி ஓடோடி வந்தார். பஸ்சில் நடந்தவற்றை எடுத்து கூறி, சம்பவத்துக்கு காரணமான டிரைவரையும் அடையாளம் காட்டினார்.

ஆத்திரம் அடைந்த சமீமாவின் உறவினர்கள் டிரைவர் முருகேசனுக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கே நின்று கொண்டிந்த பயணிகளும் டிரைவரை தாக்கினார்கள். இதை அறிந்து போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சமீமாவின் உறவினர்கள் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் டிரைவர் முருகேசனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடம் தொழுதூர் என்பதால் இந்த வழக்கு விசாரணை தொழுதூருக்கு மாற்றப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
கடலூர் பஸ் நிலையத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த டிரைவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஸ்சில் பயணம் செய்யும் பணிகள் ஏறிய இடம் முதல் இறங்கும் இடம் வரும் வரையிலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் கடமையாகும். ஆனால் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய டிரைவரே பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது வேலியே பயிரை மேய்ந்த கதைபோல ஆகிவிட்டது.

இந்த நிலையில் மாணவியிடம் சில்மிஷம் செய்த பஸ் டிரைவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திங்கள், 29 டிசம்பர், 2008

முற்றுப்புள்ளி

முடித்துவைப்பதை குறித்தாலும்
முற்றுப்புள்ளிகள்
அழகானவை.

முடிக்கத்திணறும் ஒரு காற்புள்ளியை விடவோ ( கமா )
அர்த்தம் தராத ஒரு அரைப்புள்ளியைவிடவோ (செமிகோலன்)
நிச்சயம் அழகானது
முழுவட்ட பூரணமான
முற்றுப்புள்ளி.

நம்மில் பலருக்கு
முற்றுப்புள்ளி வைப்பது இன்னும்
கைவராத கலைதான்.

சுருதியற்ற வெட்டிப்பேச்சுக்களுக்கும்,
கைகூடிவராத காதல்களுக்கும்,
முடிச்சுக்கள் விழுந்த கவிதைகளுக்கும்,
அர்த்தமில்லா தனிமை சிந்தனைகளுக்கும்....
அழகிய முற்றுப்புள்ளியொன்று வைக்க
நாம் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

முற்றுப்புள்ளி
முறித்துக்கொள்ளும் வன்மத்தின் அடையாளமல்ல.

அடுத்த வாக்கியத்தை இணைத்து வைக்கும்
சமாதானத்தூதுவன் அது.

முற்றுப்புள்ளியற்ற வாக்கியம்
அழகாக இருக்குமா என்ன?

துவக்கப்புள்ளியில் துலங்கினாலும்
முடித்துவைக்கும்
முற்றுப்புள்ளியில் அல்லவா உள்ளது
வாசல் கோலத்தின் பரிபூரணம்.

முற்றவே முற்றாத மறுமை வாழ்விற்கு முன்
மரணம் நமக்கிடப்போகும் முற்றுப்புள்ளி
எங்கு, எப்போது என்று
முற்றாக அறியாத நிலையில்
வாருங்கள்
வாழ்க்கையை
அழகாக்கி அர்த்தப்படுத்துவோம்.

சனி, 27 டிசம்பர், 2008

பரங்கிப்பேட்டையில் இண்டெர்நெட் மற்றும் வங்கி சேவைகள் பாதிப்பு

குமரக் கோயில் தெருவில் இயங்கி வந்த பி.எஸ்.என்.எல். எக்ஸ்ச்சேஞ் அலுவலகம் சந்தை தோப்பு அருகில் உள்ள அதன் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல்லின் பிராட்பேண்ட் சேவை கடந்த 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.ஏம். சேவை மட்டுமின்றி அதன் மற்ற சேவைகளும் பரங்கிப்பேட்டையில் நேற்றுவரை தடைபெற்றிருந்தது. அவசரநிலை கருதி வங்கி சேவைக்கு மட்டும் இண்டர்நெட் வசதியை நேற்று வழங்கப்பட்டது. ஆனால் வங்கி தவிர்த்து மற்ற யாருக்கும் இணைப்பை தராமல் இன்று, நாளை என்று மாற்றி மாற்றி கூறுவதால் அதன் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அலுவலகம் மற்றும் இணைப்பு கட்டிடம் மாற்று பணி நடைபெறுகிறது. இந்த சிரமத்தை நாங்களும் உணர்கிறோம். இன்று மாலைக்குள் எல்லா பிரச்சினையும் சரிசெய்யப்பட்டு வழக்கமான சேவைகள் தொடரும் என்று கூறினர்.