புதன், 1 ஏப்ரல், 2009

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தோன்றிய பின்னணி, செயல்பாடு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஓட்டுச் சீட்டு அடிப்படையிலேயே, தேர்தல் நடைமுறைகள் துவங்கின. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப கடந்த சில தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வந்ததன் அவசியம் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

பல கோடி மக்கள் பங்கேற்ற இந்திய தேர்தலில் ஓட்டுச் சீட்டுகளால் ஏற்பட்ட கால விரயம், பண விரயம் ஆகியவற்றைத் தடுக்கவும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

இதை அறிமுகப்படுத்தும் முன் சம்பத், இந்திரேசன், ராவ் கசர் பாதா ஆகியோரைக் கொண்ட தொழில்நுட்ப குழுவின் கருத்து கேட்கப்பட்டது. அக்குழு ஒருமனதாக பரிந்துரை செய்த பிறகே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது.கேரளாவில் 1982ம் ஆண்டு நடந்த பரூர் இடைத்தேர்தலின் போது, சோதனை முயற்சியாக 50 ஓட்டுச் சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகின்றன. 1996ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 8,800 டன்னும், 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு 7,700 டன்னும் காகிதம் பயன்படுத் தப்பட்டது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தால், ஒரு ஓட்டுச் சாவடிக்கு ஒரு ஓட்டுச்சீட்டு மட்டுமே தேவைப்படுவதால், காகிதம் மற்றும் அச்சிடும் செலவு வெகுவாகக் குறைந்தது.

இந்த இயந்திரம், கட்டுப்பாட்டு யூனிட், ஓட்டுப்பதிவு யூனிட் என இரு யூனிட்களை கொண்டது. கட்டுப்பாட்டு யூனிட் தேர்தல் அதிகாரி இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு யூனிட் வாக்காளர் ஓட்டளிக்கும் இடத்திலும் இருக்கும். இந்த இரு யூனிட்களும் ஐந்து மீட்டர் நீளமுள்ள கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

ஒரு வாக்காளர் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தியதும், அந்த வேட்பாளருக்கான ஓட்டுப்பதிவாகி விடும். அதன்பின் கட்டுப்பாட்டு பிரிவிலுள்ள ஓட்டு பொத்தானை ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மீண்டும் அழுத்தினால் தான், இயந்திரம் அடுத்த ஓட்டை பதிவு செய்யும். இயந்திரத்தின் சாவி பதிவு செய்யப்படும்போது, தேதியும், நேரமும் பதிவாகி விடும்.

ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது. மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.

ஓட்டுப்பதிவின் போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை.

இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப்பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத்தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும்.

பார்லிமென்ட், சட்டசபை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், இரண்டிற்கும் தனித்தனி இயந்திரம் பயன்படுத்தப்படும்.' முடிவு' பகுதி முத்திரையிடப்படா விட்டால், ஒரு குறிப்பிட்ட ஓட்டுச் சாவடியின் முடிவுகளை குறிப்பிட்ட நாளில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் முன்னரே தெரிந்து கொள்ள இயலும்.

இதனால், முத்திரை இடப்பட்ட பட்டையிலோ, காகித்திலோ தேர்தல் அதிகாரி மைய தலைவரின் முத்திரைகளுடன், வேட்பாளர் அல்லது அவரது பிரதிநிதி கையொப்பம் இடுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார். ஓட்டு எண்ணும் மையத்தில், 'முடிவு' பொத்தானை அழுத்தியதும், அதன் திரையில் அந்த சாவடியில் பதிவான மொத்த ஓட்டுகள், ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைத்துள்ள ஓட்டுகள் வரிசையாக தோன்றும். ஓட்டு எண்ணும் மைய அலுவலர்களை தவிர, வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் இதை குறித்துக் கொள்வர். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், அந்தச் சுற்றின் முடிவுகளும், மொத்த கூட்டுத் தொகையும் அறிவிக்கப்படும். சுற்று அடிப்படையிலான முடிவுகளை மொத்தமாக கூட்டி, இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

'பிரதமர்' என்பவர் யார்; அவருக்கு என்ன அதிகாரம்?

தேர்தலில் பெரும் பான்மை பெற்ற அரசியல் கட்சி தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். தேர்தலில் ஒரே கட்சி மெஜாரிட்டி பெறவில்லையென்றால் ஜனாதிபதி அழைக்கும் கட்சி ஆட்சி அமைக்கும். ஜனாதிபதியால் பிரதமர் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார். பிரதமரின் பரிந்துரைப்படி மத்திய அமைச்சர்களை ஜனாதிபதி நியமனம் செய்கிறார். பிரதமரின் சம்பளத்தை பார்லிமென்ட் முடிவு செய்கிறது. பார்லிமென்ட் உறுப்பினராக இல்லாதவரும் பிரதமராக முடியும். ஆனால், 5 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு சபைக்கு தேர்வு பெற வேண்டும்.

அதிகாரம்:
  • நாட்டின் நிர்வாக அதிகாரம் முழுமையையும் பெற்றவர் பிரதமர்.
  • அமைச்சர்களின் இலாகாக்களை பகிர்ந் தளிக்கும் பொறுப்பு இவருக்குண்டு.
  • அமைச்சர்கள் குறித்து சர்ச்சை எழும்போது அவர்களின் ராஜினாமாவை கோரும் அதிகாரம் பிரதமருக்குண்டு.
  • அமைச்சரவைக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் பிரதமரே.
  • மத்திய அமைச்சர்களில் அனைவரையும் விட அதிகாரம் கொண்டவர் இவரே.
  • பிற துறை அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு.

ஜனாதிபதியுடன் தொடர்பு:

  • அமைச்சரவைக்கும், ஜனாதிபதிக்கும் இடையே பாலம் போல் விளங்குபவர் பிரதமர்.
  • அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் ஒவ்வொன்றையும் ஜனாதிபதிக்கு தெரிவிக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு.
  • நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கு நபர்களை நியமிக்கும் போது ஜனாதிபதிக்கு உதவி செய்யும் பொறுப்பும் பிரதமருக்கு உண்டு.
  • பிரதமரின் ஆலோசனைப்படி இரு சபைகளின் கூட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
  • பிரதமரின் ஆலோசனைப்படி லோக்சபாவை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
  • அமைச்சரவை ஆலோசனைப்படி நாட்டிலோ, ஒரு மாநிலத்திலோ எமர்ஜன்சியை பிறப்பிக்குமாறு ஜனாதிபதிக்கு பிரதமர் பரிந்துரை செய்யலாம்.

மற்ற வங்கி ஏ.டி.எம்.,ல் இனி கட்டணமின்றி பணம் எடுக்கலாம்

ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பதற்கு இனி தயங்க வேண்டியது இல்லை. மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களை பயன்படுத்துவதற்கு இன்று முதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

குறிப்பிட்ட ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,கள் மூலமாக பண பரிமாற்றம் செய்தால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஒரு பண பரிமாற்றத்துக்கு 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதனால், சாதாரண மற்றும் நடுத்த வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர்.

இதையடுத்து, பண பரிமாற்றத்துக்கு எந்த வங்கியின் வாடிக்கையாளர்களாக இருந்தாலும், அனைத்து வங்கி ஏ.டி.எம்.,களையும் கட்டணமின்றி பயன்படுத்துவதற்கான நடவடிக்கைளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,களில் எந்தவித தயக்கமும் இன்றி பண பரிமாற்றம் செய்யலாம். இதற்காக, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

இதன் எதிரொலியாக, சில வங்கிகள் தங்களது ஏ.டி.எம்., மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. ஓரியண்டல் வணிக வங்கி நிர்வாக இயக்குனர் சின்கா கூறுகையில், 'நாடு முழுவதும் புதிதாக 60 ஏ.டி.எம்.,களை திறக்க முடிவு செய்துள்ளோம்'என்றார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், 'ரிசர்வ் வங்கி என்ன விதிமுறைகளை வரையறுத்துள்ளதோ அதை நாங்கள் பின்பற்றுவோம்' என்றார்.