சனி, 21 மே, 2011

பரங்கிப்பேட்டையில் பலத்த இடி..!


கடந்த சில நாட்களாகவே, பரங்கிப்பேட்டையில் கடும் வெயிலின் காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்., இந்நிலையில் மாலை முதல் நிலவி வந்த மேகமூட்டத்தின் காரணமாக இரவு 7.30 மணியளவில் லேசான தூறலாக தொடங்கி, மிக பலத்த இடியோசையுடன் பலத்த மழையாக இரவு 8.20 வரை பெய்தது. தொடர்ச்சியாக 45 நிமிடத்திற்கும் மேலாக மின்னல் - இடியோசையின் ஆதிக்கம் மிகுந்திருந்த காரணத்தினால் நகரில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை பயத்துடனே காணப்பட்டனர். முன்னெச்சரிக்கையின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மின்சாரம் வினியோகம் மீண்டும் இரவு 9 மணிக்கு தொடங்கியது.

பரங்கிப்பேட்டை பகுதியில் வாக்களர்களை சந்தித்து நன்றி கூறுவதற்காக புதுக்குப்பம் - சின்னூர் - மாதக்கோயில் தெரு வழியாக பரங்கிப்பேட்டைக்கு வருகை தர திட்டமிட்டிருந்த சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன் தனது சுற்றுப்பயணத்தை பலத்த மழை - இடி - மின்னல் காரணமாக மாதக்கோயில் பகுதியிலேயே நிறைவு செய்தார். பலத்த இடியின் காரணமாக பெரும்பாலோர் செல்போன் உள்ளிட்ட மின்னனு சாதனங்களை அந்நேரத்தில் உபயோகிக்கவில்லை, இருந்தபோதிலும் நகரிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களின் மின்னணு சாதனங்கள் பழுதுக்குள்ளாகியது.

மீண்டும் நள்ளிரவு சுமார் 2.30 முதல் பெய்யத்தொடங்கிய மழை பலத்த மழையாக உருவெடுத்து அதிகாலை வரை பெய்தது. இந்நேரத்தில் இடியோசை இல்லாமல் இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது. கோடையின் வெப்பத்தை தவிர்க்க இம்மழை பேருதவியாக இருந்தது என்றாலும் மிகக்கடுமையான இடியோசையின் காரணமாக மக்கள் மிரட்சியுடனே இருந்தனர்.

வெள்ளி, 20 மே, 2011

இந்த பதவி கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை: அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பரங்கிப்பேட்டையைச் சார்ந்த சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் அளித்துள்ள பேட்டியில், '"நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை முதல்- அமைச்சர் ஜெயலலிதா கொடுத்திருப்பதற்கு காலமெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்" என்றார்.
 
அவர் மேலும் கூறியதாவது: இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்க வில்லை. கடந்த 10 வருடமாக  பஞ்சாயத்து தலைவராகவும், சட்டமன்ற உறுப்பிளராகவும் பணியாற்றினேன். இப்போது முதல்-அமைச்சர் எனக்கு அதை விட முக்கிய பொறுப்பை வழங்கி இருக்கிறார். அதற்கு நான் தகுதி உள்ளவராக செயலாற்றுவேன்.
 
3-வது முறையாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார். பின்தங்கிய ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.
 
படித்த, ஏழை பெண்கள், பட்டதாரி, டிப்ளமோ படித்த பெண்கள் திருமண உதவித் தொகை ரூ.25 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் போன்ற திட்டங்கள் சமூக நலத்துறையின் கீழ் பெண்களுக்கு முழுமையாக சென்றடைய பாடுபடுவேன்.சத்துணவு, அங்கன்வாடி ஊட்டச்சத்து துறை பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.  
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் கடந்த ஆட்சியில் முறையாக செயல்படுத்தப் படவில்லை. அரசு மருத்துவமனைகளில் தொட்டில் குழந்தைகளை பாதுகாக்கவும், பின்னர் காப்பகங்களில் பராமரித்து வளர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டத்திற்கு தேவையானவற்றை செய்து மேம்படுத்தப்படும்.
 
இவ்வாறு செல்வி ராமஜெயம் கூறினார்.

கடந்த வாரம் ரிசல்ட், இந்த வாரம் அரெஸ்ட்..!


ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில், சம்மன் அனுப்பப்பட்டதால், கடந்த 6-ந் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு 20-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, கனிமொழி முன்ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்தது. இந்தநிலையில் கனிமொழி ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மனு இன்று விசாரணைக்கு வந்தபோது கனிமொழியின் முன் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

முன்னதாக கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், "தீர்ப்புக்காக காத்து இருக்கிறேன். எது நடந்தாலும் எதிர்கொள்வேன்'' என்றார். கனிமொழி எம்.பி. முன் ஜாமீன் மனு மீது பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி சைனி அறிவித்தார். அதன்படி 2.30 மணிக்கு நீதிபதி சைனி தீர்ப்பை வாசித்தார். கனிமொழி எம்.பி.க்கும், கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கும் முன்ஜாமீன் வழங்க இயலாது என்று தீர்ப்பளித்தார். 14 நாள் கோர்ட்டு காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். முன்ஜாமீன் மறுக்கப்பட்ட காரணத்தால் கனிமொழி எம்.பி. உடனடியாக கைது செய்யப்பட்டார். சரத்குமாரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரையும் திகார் ஜெயிலில் அடைக்க சி.பி.ஐ. போலீசார் அழைத்துச் சென்றனர். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெற உள்ளதால் கனிமொழியை நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

அடுத்தடுத்த வெள்ளிக்கிழமைகளி்ல் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதால், அக்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை தமிழக சட்டசபை தேர்தல் மு‌டிவில், பொதுமக்கள் திமுகவை தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளாக, இந்த வெள்ளிக்கிழமை, திமுக தலைவரின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், அடுத்த வெள்ளிக்கிழமை என்ன ஆகும் என்‌று திமுகவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.