செவ்வாய், 14 ஜூன், 2011

எம்.எல் ஏ-வுக்கு பிடி-வாரண்ட்



1997 - ஆம் ஆண்டு கோவை கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உதவித்தொகை வழங்கப்பட்டது. இதற்காக வெளிநாட்டில் பணம் வசூல் செய்யப்பட்டதாகவும், அந்தப் பண வசூல் தொடர்பாக முறையான ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை என்பதால் கடந்த 2001 -ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.


இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் மூன்று முறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகததால் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வும் த.மு.மு.க மாநிலத் தலைவருமான ஜவாஹிருல்லாஹ், த.மு.மு.க பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றும் நல்லார் முஹம்மது,காசிம்,செய்யது நிஷார் அஹ்மது ஆகிய ஐந்து பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்டை பிறப்பித்து எழும்பூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


source:dinakaran

ஹஜ் யாத்ரிகர்களுக்கு மேலும் சலுகைகள்

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியப் பயணிகளுக்கு மேலும் சில சலுகைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா திங்கள் கிழமை அறிவித்தார்.


எழுபது வயதுக்கு மேற்பட்ட பயணிகள் உடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம்.


தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் சீட்டு குலுக்கல் ஏதும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள்.


பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தால், போலீஸ் சரிபார்ப்புகூட இல்லாமல், 8 மாதங்களுக்குச் செல்லத்தக்கதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்.


யாத்திரைக்கு சாமான்கள் எடுத்துச் செல்லும் நடைமுறை எளிதாக்கப்படும்.


இந்தியாவில் 21 ஊர்களிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு விமானங்களில் நேரடியாகச் செல்லலாம்.


ஹஜ் பயணத்தின்போது இந்திய யாத்ரீகர்கள் தங்க 1,25,000 வீடுகள் வாடகைக்கு எடுக்கப்படும்.


ஜித்தாவில் இந்தியத் தூதரகத்தில் இந்திய யாத்ரிகர்களுக்கு உதவுவதற்காக தனிப்பிரிவு செயல்படும்.


கடந்த ஆண்டு 1,71,671 பேர் யாத்திரை மேற்கொண்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.


இத்தகவல்களை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நிருபர்களிடம் தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

திங்கள், 13 ஜூன், 2011

சி.முட்லூரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பரங்கிப்பேட்டை அணி வெற்றி

சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பரங்கிப்பேட்டை ஆர்.சி.சி., அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.

சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் சேலஞ்சர் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது. துவக்க நிகழ்ச்சியில் சிவசங்கரன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் முனுசாமி, நம்மாழ்வார், ராமச்சந்திரன், ராமநாதன் முன்னிலை வகித்தனர். வரதராஜன் போட்டியை துவக்கி வைத்தார். பாபு சீருடை வழங்கினார்.

சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், பரங்கிப்பேட்டை மற்றும் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் முதல் நான்கு பரிசுகளாக 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை வழங்கும் நிகழ்ச்சி சி.முட்லூர் விளையாட்டுத் திடலில் நடந்தது. அணித் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் பானுச்சந்தர் முன்னிலை வகித்தார்.

முதல் பரிசு 6,666 ரூபாய் பரங்கிப்பேட்டை ஆர்.சி.சி., அணியும், இரண்டாம் பரிசு 5,555 ரூபாய் ஒரத்தூர் நாட் ரீச்சபிள் அணியும், மூன்று மற்றும் நான்காம் பரிசுகளாக 7,777 ரூபாயை சி.முட்லூர் சேலஞ்சர் இரு அணிகளும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினர். தமிழ் நன்றி கூறினார்.

நன்றி: தினமலர்