செவ்வாய், 6 டிசம்பர், 2022

பரங்கிப்பேட்டை டவுன் காஜி M.K.எஹ்யா சாஹிப் காலமானார்.

“மஹ்மூதுபந்தர் தாருல் கஜா ஷரா ஷரீப் மஹ்கமா நிக்காஹ் பதிவு தப்தர் நமூனா, போர்ட்நோவா தற்காலம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை……” என்று பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் திருமண நிக்காஹ்-வின் போது,
ஓங்கி ஒலித்த  கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் பரங்கிப்பேட்டை டவுன் காஜி M.K.  எஹ்யா சாஹிப். இன்று (06-12-2022) உடல்நலக்குறைவால் காலமானார்.


 மலரும் நினைவுகளாக, அவரவர் தங்களது திருமணக்கால நிகழ்வலைகளில் மூழ்கிடும் போது  இவரிடம் பரிகாசத்துடன் பால் பழம் ஊட்டிக்கொண்டதும், கம்பீரமான இவரின் குரலும் நிச்சயம் நினைவுக்கு வரும் 

எஹ்யா சாஹிப், பல ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரும் அப்போதைய டவுன் காஜியாருமான Z. கபீர் கான் சாஹிப் காதிரி உடன் (நாயீப் காஜி) – துணை காஜியாக தனது பொது வாழ்க்கையை துவங்கினார். 

2004 ஆம் ஆண்டு காஜியாக பொறுப்பேற்று நீண்ட காலம் பணியாற்றிய எஹ்யா சாஹிப், தனது வாழ்நாளில் பல ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்தவர். 

இஸ்லாமியர்களின் திருமணங்களை நடத்தி வைக்க அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட காஜிகள் சென்னை, திருச்சி, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட ஊர்களில் மட்டுமே உண்டு என்ற கூற்றும் உண்டு.




சில வருடங்கள் மக்தும் அப்பா பள்ளி (பக்கீம்ஜாத்)யில் இமாம் ஆக பணிபுரிந்த எஹ்யா சாஹிப், பரங்கிப்பேட்டையில் அன்றைய காலத்தில் வழக்கத்தில் இருந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் இருந்து, திருமண நிச்சயதார்த்தம், திருமணம் மற்றும் இறப்பு - நல்லடக்க  நேரங்களில் செய்த உதவிகள் -  சேவைகள், நல்லடக்க  ஏற்பாடுகளின் போது  இளைஞர்களுக்கு வழிக்காட்டியது  என பரங்கிப்பேட்டை சமுதாயத்திற்கு அவர் வழங்கிய பங்களிப்புகள் ஏராளம். 

பல வருடங்களுக்கு முன் ரெயிலடியில் சில முஸ்லீம் குடும்பங்கள் வசித்து வந்தனர், அம்மக்களின் சுக சோகங்களின் போது உடனிருந்த மனிதர்.
அங்கு நிகழ்ந்த இறப்புக்கு மைய்யத்தை அங்கிருந்து மீராப்பள்ளிவரை அப்போது சுமந்து வந்தவர்களில் இளைஞர் எஹ்யா சாபும் ஒருவர். இளம்வயது முதல் இதுபோன்ற நற்காரியங்களில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் கலந்துகொண்டவர்.

மீரா பள்ளியில் ஜும்ஆ குத்பாவுக்கு முன்னால் பல ஆண்டுகளாக மஹ்ஷர் ஓதியது,

பெரு நாட்களில் கம்பீர குரலில்  பக்கிம்ஜாத் பள்ளிவாசலிலிருந்து மக்களை ஜமாஅத்தாக அழைத்துச் சென்றது,

1997-ல் பழனிபாபா கொலை செய்யப்பட்டபோது கவுஸ் பள்ளியிலிருந்து சென்ற இரங்கல் ஊர்வலத்தில்  முதல் வரிசையில் கலந்து கொண்டது

என்று அவர் பொது வாழ்வு குறித்த நினைவுகளும் ஏராளம் உள்ளன. 

அண்மைக்காலங்களில் , மணமகனின் நண்பர்களால் சில திருமணங்கள் சற்று தாமதமாக நடைபெறுவது குறித்து முன்பு ஒரு முறை கவலையுடன் கருத்து தெரிவித்த  எஹ்யா சாஹிப், திருமண வைபவங்களுக்கு பலர் தங்களது தனிப்பட்ட வேலைகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி வருகின்றனர்,  மேலும் உடல் நலனில் சற்று நலிவடைந்தவர்களும், திருமண அழைப்பினை மதித்து தங்கள் நலனை பொருட்படுத்தாது வருகை தருகின்றனர், அத்தகையோர்களை, அதீத தாமதங்களால் சிரமத்திற்குள்ளாக்கி விடாமல்,  திருமணங்கள் உரிய நேரத்தில் தாமதமின்றி நடைபெற்றிட வேண்டும், இப்போதைய வாலிபர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

பரங்கிப்பேட்டையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவரான காஜி M.K.எஹ்யா சாஹிப் அவர்களுக்கு  எல்லாம் வல்ல இறைவன் உயரிய சுவர்க்கத்தை தந்தருள வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

காஜி M.K.எஹ்யா சாஹிப் அவர்களின் குடும்பத்தினருக்கு MYPNO சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்

ஞாயிறு, 27 நவம்பர், 2022

ஜமாஅத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு முடிவடைந்தது!

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (27-11-2022)   காலை 8:00 மணிக்கு தொடங்கியது. மீராப்பள்ளி தெரு மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.  

சுமார் 4600-க்கும் சற்று மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில் நண்பகல் வரை வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது. பின்னர் பகலில் சற்று அதிகரித்தது.

ஜமாஅத் தலைவர் பதவிக்கு தேர்தல் தேவை இல்லை, தேர்வுக்குழுவால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென பரவலாக குரல் எழுப்பட்ட நிலையில், அந்த எண்ணத்தில் இருக்கும் பலர் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.


கள்ள ஓட்டு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவ்வப்போது சலசலப்புகள் – வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

இந்த தேர்தலில் 1892 வாக்குகள் பதிவானது.  இது கடந்த 2009 (1966 வாக்குகள்), 2016(1764 வாக்குகள்) தேர்தல்களை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

பரங்கிப்பேட்டையின் வாகன போக்குவரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் பெரிய தெரு - மீராப்பள்ளி தெரு பகுதிகள் இரு தரப்பு ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களால் பரபரப்பாக காணப்பட்டது

வாக்குப்பதிவையொட்டி காவல்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

சனி, 26 நவம்பர், 2022

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்தல் 2022 - ஒரு பார்வை..!

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையிலான நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக , ஐக்கிய ஜமாஅத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற உள்ளாட்சி நிதித் தணிக்கையாளருமான I.முஹம்மது இல்யாஸ் தலைமையில், ஓய்வு பெற்ற தாசில்தார் O.முஹம்மது கவுஸ், NLC India-வில் பணியாற்றி ஓய்வு பெற்ற A.அஷ்ரப் அலி, M. மெய்தீன் அப்துல் காதர் (பசுமை ஹாஜி) , M.கஃப்பார் அலி கான் ஆகியோர் உள்ளிட்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டது.

தேர்தல் அலுவலர்கள் 

27-11-2022-ல் நடைபெற இருக்கும் தேர்தலில் கேப்டன் M.ஹமீது அப்துல் காதர், B.ஹமீது கவுஸ் ஆகியோர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இதில் கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் ஏற்கனவே ஜமாஅத் தலைவராகவும், B.ஹமீது கவுஸ் பொதுச்செயலாளராகவும், துணைத்தலைவராகவும் பொறுப்புகள் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வேட்பாளர்கள்: B.ஹமீது கவுஸ், கேப்டன் M.ஹமீது அப்துல் காதர்

வேட்புமனுத் தாக்கல் 

கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் கப்பல் சின்னத்திலும், B.ஹமீது கவுஸ் ஏரோப்ளேன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் இஸ்லாமியப் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு கோரினர்.

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் மிகுந்து இருக்கும் இக்காலத்தில், இந்த தேர்தல் நடைபெறுவதால், தேர்தலுக்கான பரப்புரையிலும், இரு தரப்பு ஆதரவாளர்களின் வாத – பிரதிவாதங்களிலும் வாட்ஸப் பிரதான ஊடகமாக இருந்து வருகிறது.

NRIக்களின் பல வருடக் கோரிக்கையான NRIக்களுக்கு வாக்குரிமை அளிப்பது தொடர்பாகவும் NRI க்கள் தரப்பில் இந்த முறையும் முறையிடப்பட்டது எனினும் இந்த முறையும் அது சாத்தியப்படாமல் போனது அதிருப்தியை ஏற்படுத்தியது. 

NRIக்கள் தேர்தல் அலுவலர்கள் சந்திப்பு 

தேர்தலைத் தவிர்த்து தேர்வு மூலம் தலைவரைத் தேர்ந்தெடுக்கக் கோரி சமரசக் குழு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களிடத்தில் தேர்தலைத் தவிர்க்கக் கோரி நேரில் சந்திப்பு நடத்தி வலியுறுத்தப்பட்டது. எனினும் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. 

சமரசக்குழு 

சமரசக்குழுவில் , M.I. முஹம்மது முஹைய்யதீன் (தம்பிராஜா),  M. ஹஸன் பஸரி, N. முஹம்மது தாஹா G.K. தௌலத் அலி, M.K. ஜெய்னுலாபுதீன் மாலிமார் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த M.S.காஜா ஹபீபுல்லா,  பின்னர் போட்டியிலிருந்து விலகினார்.

 இனி வரக்கூடிய காலங்களில் NRI க்களுக்கு ஓட்டுரிமையும், தேர்வு கமிட்டி மூலம் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறைக்கும் இரு வேட்பாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

இரு தரப்பு தேர்தல் வாக்குறுதிகள் 

நாளை 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற இருக்கும் வாக்குப்பதிவிற்கு பின்னர் முடிவுகள் நாளை இரவே அறிவிக்கப்பட இருக்கிறது.

கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் தரப்பில், மருத்துவர் S. நூர் முஹம்மது துணைத்தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார், மேலும் கேப்டன் தரப்பு ஆதரவாளர்களாக, ஷாஜஹான், ஹாமீம், கவுஸ் மரைக்காயர், காஜா மெய்தீன் (தம்பி), வழக்கறிஞர் அன்சாரி, முஹம்மது அப்துல் காதர் (சேட்டு), வழக்கறிஞர் முஹம்மது ஹனிபா, ஹபீபுல்லா உள்ளிட்டோரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் தரப்பு

B.ஹமீது கவுஸ் தரப்பில் முதன்மை ஆலோசகராக தற்போதைய ஜமாஅத் தலைவரும் – பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான M.S. முஹம்மது யூனுஸ் அறிவிக்கப்பட்டிருக்கிறார், மேலும் B.ஹமீது கவுஸ் ஆதரவாளர்களாக நஜீர் உபைதுல்லாஹ், ஜெய்னுல்லாபுதீன், முனவர் உசேன், முத்துராஜா, ஹஸன் அலி, ஹபீப் ரஹ்மான் ஜாபர் ஷரீப் , சாலிஹ் மரைக்காயர் உள்ளிட்டோரும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

B.ஹமீது கவுஸ் தரப்பு 

இந்தத் தேர்தலில் சமூக வலைத்தளம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுவதால் இரு தரப்பிலும் சிலர் சமூக வலைத்தளங்களில் செய்யும் பதிவுகள் முகச்சுளிப்பை ஏற்படுத்துவதாகவும், ஒற்றுமையைக் குலைப்பது போல அமைவதாகவும் கவலையோடு சுட்டிக் காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.  

இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அமைய இருக்கும்  நிர்வாகம் அடுத்த முறை தேர்வுக்குழு (சூரா கமிட்டி) மூலம் தலைவரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யவேண்டும், அதற்கேற்றார் போல் அமைப்புவிதிகளில் (பைலா-வில்) முறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், பைத்துல்மால் முறையாக சீர்படுத்தப்பட வேண்டும் போன்றவையே இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்களிடம்  மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கு இதற்கு முன் 2009 மற்றும் 2016- ஆண்டு என இருமுறை தேர்தல் நடந்தேறிய நிலையில் இந்த தேர்தல் மூன்றாவது தேர்தல் ஆகும்.