திங்கள், 27 மே, 2024

பரங்கிப்பேட்டையில் சுற்றுச்சூழல் ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா

 கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுநலச்சேவையில் ஈடுபட்டு வரும் கிரஸண்ட் நழ்வாழ்வு சங்கம் சார்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவிகளுக்கு ஓவியப்போட்டி நேற்று (26-05-2024) காலை BMH நினைவு ஷாதி மஹாலில்  நடைபெற்றது. பரங்கிப்பேட்டை தழுவிய இப்போட்டியில் ஏராளமான மாணவமாணவியர் பங்கேற்றனர்.

 

கிரஸண்ட் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர்  குலாம் கவுஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, செயலாளர் நூர் அலி முன்னிலை வகித்தார், இணைச்செயலாளர் முஹம்மது வலீத் வரவேற்றார்

 


இந்த ஓவியப்போட்டியில்  முதல் பரிசு பெற்ற பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி  வஸீலா இக்பால் அலி, உள்ளிட்ட பரிசு பெற்ற அனைவருக்கும் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.. பாண்டியன் பரிசு - பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 


இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை  இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

பரங்கிப்பேட்டை கலிமா மெட்ரிக்குலேஷன் பள்ளி சார்பாக போட்டியில் பங்கேற்ற  மாணவமாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

 விழாவில் கிரஸண்ட் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் அன்வர் ஹசன், தாரிக் உசேன், ஷேக் நெய்னா உட்பட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் முஹம்மது காமில் நன்றி கூறினார்.

 

Image Credit: Raja-6311

செய்தியாளர்: ஹாஸியா

 

வியாழன், 14 மார்ச், 2024

பரங்கிப்பேட்டையில் அரசு விழா அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில், ணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பரங்கிப்பேட்டை சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா, மாவட்ட  சிறுபான்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை கடந்த 12.03.2024 வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் நடைபெற்றது








இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,  சார் ஆட்சியர்  ராஷ்மி ராணிதாசில்தார் தனபதிபரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் முஹம்மது யூனுஸ், கிள்ளை பேரூராட்சி மன்ற துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் முத்து.பெருமாள், கடலூர் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சங்கர்,  செயல் அலுவலர் திருமூர்த்தி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் செழியன், ஆனந்தன், ஜாபர் ஷரீப்மாரியப்பன்உட்பட பலர் பங்கேற்றனர்சிறுபான்மையினர் நலத்துறை கண்காணிப்பாளர் ராமசாமி நன்றி கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு (13.01.2023) சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது, "பரங்கிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் பல்வேறு பதிவு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். எனவே, இந்த கட்டிடத்தையும் புதிதாக கட்டித் தரப்படுமா?" என்று சிதம்பரம் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துணைக் கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, "புதிய கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

இந்நிலையில் இந்த அரசு நிகழ்ச்சியில் சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்:  ச.வ