திங்கள், 25 மே, 2009

பிச்சாவரம் போகலாம் வாங்க!








சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.






சிதம்பரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதி.






பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீட்டர்.






மேற்கே உப்பனாறும், தெற்கே கீழ்திருக்கழிப்பாலையும், வடக்கே காடுகளும் எல்லைகளாக உள்ளன.






பிச்சாவரத்தின் சதுப்பு நிலக் காடுகள் கடலோரம் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.






இந்த சதுப்பு நிலக்காடுகளில் (சுந்தரவனக் காடுகள்) உப்பங்கழிகள் மற்றும் அடர்த்தியான மாங்குரோவ் (சுரபுண்ணை) காடுகள் உள்ளன.






இந்த காடுகளில் சுமார் 4400 கால்வாய்கள் உள்ளன.







இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.






இந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்வையிடலாம்.






கடலோரம் உள்ள எழில்மிகு அழகிய தீவுகளையும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்.






பிச்சாவரம் வனப்பகுதியை சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பார்க்கும் வண்ணம் உயர்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.






2004 டிசம்பர் 26ந் தேதி சுனாமி பேரலை வந்த போது இந்த மாங்குரோவ் காடுகள் பேரலையின் வேகத்தை குறைத்து பிச்சாவரம் பகுதியில் பெரும்பாதிப்பை தடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






பிச்சாவரத்தில் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுக்குழாம் மற்றும் உணவகம் ஆகியவற்றை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது என சுற்றுலா அலுவலர் காமராஜ் தெரிவித்தார்.






இங்கு பிச்சாவரத்தில் கடலோரப் பகுதியில் எம்ஜிஆர் திட்டு, சின்ன வாய்க்கால் மற்றும் பில்லுமேடு ஆகிய எழில்மிகு தீவுகள் உள்ளன.






எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படப்பிடிப்பு அங்குள்ள தீவில் நடத்தப்பட்டதால் அந்த தீவிற்கு எம்ஜிஆர் திட்டு என பெயரிடப்பட்டுள்ளது.






மேலும், பிச்சாவரத்தில் சூரியன் உள்ளிட்ட பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.






மேற்கண்ட தீவுகளில் மீனவர் குடும்பங்கள் வசித்து வந்தனர்.






சுனாமி பேரலைக்கு பிறகு அத்தீவில் மீனவர்கள் குடியிருக்க அரசு தடைவிதித்துள்ளது.






தற்போது சின்ன வாய்க்கால் தீவில் குடில்கள் அமைக்கப்பட்டு பகல் நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வரும்.






ஆனால், தற்போது வெளிநாட்டு பறவைகள் வருகை எண்ணிக்கை குறைந்துள்ளது.






"ஹெச்ஐவி என்ற உயிர்க்கொல்லி மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோயை அழிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் மற்றும் கொசுக்களை விரட்டக்கூடிய ரசாயனப் பொருட்கள் மாங்குரோவ் காடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது'' என அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியியல் உயராய்வு மைய இயக்குநர் டி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.






"பிச்சாவரம் பகுதியில் தில்லை என்ற வகை மரங்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மரவகைகள் அழிந்துவிட்டதாகவும், தில்லை மரம் மருத்துவகுணம் கொண்டது என்றும், தொழுநோய் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தாவரமாகும்.






எனவே, இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் தில்லை தாவரங்களை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்கிறார் கிள்ளை பேரூராட்சி தலைவர் எஸ்.ரவிச்சந்திரன்.






இத்தகைய அழகுமிக்க வனப்பகுதியுடன் கூடிய பிச்சாவரத்துக்கு ஒருமுறை சென்று வரலாமே!






பஸ் கட்டணம்






சிதம்பரத்திலிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம்.






சிதம்பரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் உள்ளது.






பஸ் கட்டணம் ரூ.5.






பிச்சாவரத்தில் அறிஞர் அண்ணா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகுக் குழாம் உள்ளது.






ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 கட்டணம்






குறைந்தது 5 பேர் ஒரு படகில் பயணம் செய்ய ரூ.125 வசூலிக்கப்படுகிறது.






காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகு சவாரி.






சிதம்பரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலக எண்: 04144- 238739.






கிள்ளை பேரூராட்சி அலுவலகம் எண்: 04144-249227.











Source: தினமணி

சி.ஏ.க்கு இணையான வேலை வாய்ப்புள்ள புள்ளியியல் படிப்பு!

வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதும், சி.ஏ. படிப்புக்கு இணையானதுமான புள்ளியியல் துறை படிப்பு பற்றி தமிழக மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த படிப்புகளைத் தவிர, உயரிய அந்தஸ்து, வருமானம் தரும் மற்ற படிப்புகளும் உள்ளன.

உதாரணமாக, புள்ளியியல் துறை படிப்பு. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம்.

இந்த துறை குறித்து சென்னை பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கூறியது:

புள்ளியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இன்சூரன்ஸ், மருந்து கம்பெனிகள், சோப்பு, குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் நிறுவனங்கள் போன்றவற்றில் மார்க்கெட்டிங் பிரிவில் சேரலாம்.

மேற்படிப்பு அதாவது எம்.எஸ்சி (ஆக்சூரிஸ்), எம்.எஸ்சி (புள்ளியியல்) படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஆக்சூரிஸ் படிப்பு சார்ட்டர்டு அக்கவுண்டன்டுக்கு (சி.ஏ.) இணையாக கருதப்படுகிறது.

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசிகளை வடிவமைக்கும் பணியை ஆக்சூரிஸ்கள் மேற்கொள்கின்றனர். அதாவது எந்த விதமான பாலிசியை கொண்டு வரலாம் என்பதை இவர்கள் தான் வடிவமைக்கின்றனர்.

ஆக்சூரிஸ் படிப்பு படிக்கும் போதே மும்பையில் உள்ள இஸ்டிடியூட் ஆப் ஆக்சூரிஸில் பதிவு செய்து, அதன் தேர்வை எழுத வேண்டும்.

இதில் வெற்றி பெற்றவர்கள், இந்த தேர்வு எழுதாத மற்ற ஆக்சூரிஸ்களைவிட மூன்று மடங்கு சம்பளம் கூடுதலாக பெறுகின்றனர்.

அதே போன்று இந்த துறை தொடர்பான பயோ ஸ்டேஸ்டிக்ஸ் படித்தவர்களுக்கு மருந்து தயாரிப்பு கம்பெனி, அவற்றைச் சோதனை செய்யும் கம்பெனி போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

முதுநிலை புள்ளியியல் படிப்பு சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளது.

இந்த படிப்பில் டெல்லி, மும்பை, குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் சேர்கின்றனர்.

தமிழக மாணவர்களிடம் இப்படிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை.

இந்த ஆண்டு முதல் பி.எஸ்சி.,யில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள் முதுநிலை படிப்பில் சேரலாம்.

கடந்த ஆண்டு வரை பி.எஸ்சி கணிதம், புள்ளியியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டனர்.

இந்த படிப்பை முடித்தவர்கள் கம்பெனிகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால் மாணவர்கள் குறைவாக உள்ளனர் என்றார்.

சென்னையில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் புதிய கல்லூரி!

சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் இஸ்லாமிய சமய கண்ணோட்டத்துடன் 'பிரிஸ்டன் இன்டர்நேஷனல்' கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கல்லூரி தரப்பில் கூறியிருப்பது:

இந்தியாவிலேயே முதல் முறையாக, இஸ்லாமிய கண்ணோட்டத்துடன், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது.

இந்தக் கல்லூரி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கே.பி.தாசன் சாலையில் உள்ளது.

இதில் மூன்று வருட பி.ஏ. (இஸ்லாமிய படிப்பு), பி.பி.ஏ., படிப்புகள், 2 வருட எம்.பி.ஏ., ஒரு வருட எக்ஸிக்யூடிவ் எம்.பி.ஏ., பி.எட். உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.

கனடாவைச் சேர்ந்த டாக்டர் பிலால் பிலிப்ஸின் நேரடி மேற்பார்வையில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். ஆகியவற்றில் பணியாற்றிய பேராசிரியர்கள் பாடம் எடுக்கின்றனர்.

கல்லூரியில் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி ஏ.சி. வகுப்பறைகள், தொழுகை நடத்த வசதி, லேப்டாப்களை இயக்கக் கூடிய பிரத்யேக வைப்பி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இணையதளம்: http://www.prestonchennai.ac.in/