வியாழன், 28 ஏப்ரல், 2011

இறப்புச் செய்தி

ஹக்கா சாஹிப் தர்கா தெருவில், மர்ஹூம் அப்துல் அஜீஸ் அவர்களின் மகனாரும், அன்சாரி அவர்களின் சம்மந்தியும் ஹஸன் அலி அவர்களின் மாமனாரும், ஹுஸைன், சதாம் ஆகியோர்களின் தகப்பனாருமான "குடைக்கார பாய்" என்கிற A.ஷர்புதீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்கா அடக்கஸ்தலத்தில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஜெயலலிதா வழக்கு: பரங்கிப்பேட்டையில் 36வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது

பரங்கிப்பேட்டை: நான்கு தொகுதியில் மனுதாக்கல் செய்தது தொடர்பாக ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு பரங்கிப்பேட்டையில் 36வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புவனகிரி, புதுக்கோட்டை உள்பட 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இது தவறு எனக் கூறி முன்னாள் திமுக எம்.பி குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக செல்வமணி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார், உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் இந்த வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் பலமுறை விசாரணைக்கு வந்து ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி கோமதி, வழக்கை வரும் ஜூன் மாதம் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு ஒத்திவைக்கப்படுவது இது 36வது முறையாகும்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சிப்காட் தொழிற்சாலைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!

பரங்கிப்பேட்டை: சிப்காட் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் பரங்கிப்பேட்டை மினி ஷாதி மஹாலில் நடைபெற்றது. ஜி. நிஜாமுத்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுத்தீன், ஆலோசகர் பால்கி (எ) பாலகிருஷ்ணன், சிப்காட் சுற்றுசூழல் கண்காணிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்படும் காற்று மாசு, எத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் தொடர்கதையாகி இருக்கும் இன்றைய முக்கியமாக சூழலில் இந்த விழிப்புர்வு கருத்தரங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிப்காட் தொழிற்பேட்டையில் சேகரிக்கப்பட்ட காற்றுமாசு, பாதுகாப்பான பைகளில் அடைக்கப்பட்டு, அமெரிக்க நாட்டின் தரம் வாய்ந்த 6 ரசாயனக் கூடங்களில் ஒன்றான கொலம்பியா ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவுகளை தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் இந்த நிகழ்ச்சியில் விவரித்தார்.

கடலூர் காற்று மண்டலத்தில் புற்று நோயை உருவாக்கும் மோசமான ரசாயனங்கள் 2 ஆயிரம் மடங்கு இருப்பதாக சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் அறிவித்தது. எனினும் இந்த நிலைய முழுமையாக மாற்றி அமைக்க மாசுக் கட்டுப்பாடு வாரியம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதாது என்பது பொதுநல அமைப்புகளின் கருத்து. இந்த நிலையில் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் இந்த 3 அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது. இப்போதும் சிப்காட் தொழிற்சாலைகள் பகுதி காற்று மண்டலத்தில் 6 வேதிப் பொருள்கள் உள்ளிட்ட 19 நச்சு வேதிப் பொருள்கள் இருப்பதை அந்த அறிக்கைகள்  உறுதிப்படுத்தி உள்ளன.
 
இதற்கிடையே சிப்காட் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் 6 புதிய தொழிற்சாலைகளின் கட்டுமானங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. 6 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, கப்பல் கட்டும்தளம், 13,320 மெகா வாடா திறன்கொண்ட 3 அனல் மின் நிலையங்கள் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இப்புதிய திட்டங்கள் சுற்றுச்சூழலை மேலும் மோசமாக்கும் என்றார் நிஜாமுதீன்.
அடுத்து பேசிய சிப்காட் சுற்றுசூழல் கண்காணிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் அருள், ' இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் அதிகம் உள்ள பரங்கிப்பேட்டைக்கு அருகில் இருக்கும் பிச்சாவரத்தில், சிப்காட் சுற்றுச்சூழல் பாதிப்பால் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எதிராக மாங்குரோவ் காடுகளுக்கு அருகே 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் வாழத் தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் கடலூர் 16-வது இடத்தில் இருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது. கடலூர், நாகை மாவட்டங்களில் 250 ச.கி.மீ. பரப்பளவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மேலும் ரசாயன ஆலைகளையும், அனல்மின் நிலையங்களையும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் நிறுவதற்காக அரசின் இணையதளங்களில் கார்பரேட் முதாலாலிகளுக்கு அழைப்பு விடுக்கிறது' என்று பேசினார்.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசகர் பால்கி (எ) பாலகிருஷ்ணன் பேசுகையில்,  'கடலூர் மாவட்டத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் பெருமளவில் காற்று மாசு நிறைந்து இருக்கிறது. அழுகிய முட்டையின் நாற்றம், ரப்பர் எரிக்கும் போது வரும் மணம், அழுகிய உடம்பின் நாற்றம், நெயில் பாலிஷ் வாசனை என மாசுபட்ட காற்றிலிருந்து ஏராளமான சாம்பிள்கள் எடுத்திருக்கிறோம். அத்தனையும் சிப்காட்டிலுள்ள ஒவ்வொரு கம்பெனியும் வெளிவிடும் மாசுக்கள்.  இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து சளி, ஆஸ்துமா என சுவாசம் தொடர்பான பாதிப்புகள் அதிகம். பெண்கள் வயதுக்கு வருவது தள்ளிப்போவது முதல், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு,  கருச்சிதைவு, குழந்தையின்மை என்று அவர்களின் வாழ்க்கையில் கோர விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கின்றன என்று ஆபத்தை அடுத்த தலைமுறைக்கு விதைத்துக் கொண்டிருக்கும் இவற்றின் ஹிட் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கிறது'  என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜி. நிஜாமுதீன் நன்றி தெரிவித்து பேசும்போது, ஒரு இறைநம்பிக்கையாளர் தெருவில் பிறருக்கு இடையூறாக இருக்கும் சிறிய கல்லை அப்புறப்படுத்துவதில் ஒழுங்கை கற்றுத்தரும் இஸ்லமிய நம்பிக்கைபடி பார்க்கும்போது, சிப்காட்டினால் விளையும் இது போன்ற கொடூரமான சுகாதரக்கேடுகளுக்கு எதிராக போரடவேண்டியது அவசியம் என்று சொன்னதுடன், 'கேன்சர் மற்றும் தோல், ஆஸ்தமா நோய்கள் வெளியில் செல்லும் ஆண்களைவிட இல்லங்களில் தங்கியிருக்கும் பெண்கள், மூத்தகுடிமகன்கள் மற்றம் சிறு குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது' என்று பால்கி கூறியதை நினைவு கூர்ந்தார்.

ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்த கருத்தரங்கம், ஒரு நல்ல துவக்கம் என்றாலும், முறையாக விளம்பரப்படுத்தாதினாலும் அனைவருக்கும் அழைப்பு எட்டாமல் போனதினாலும் சில-பலருடைய ஆதங்கமும் வெளிப்படுத்தப்பட்டது.