ஊனமுற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊனமுற்றோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 31 மே, 2009

பெண்கள், ஊனமுற்றோருக்கு தொழிற்பயிற்சி: ஜூன் 2-ல் தேர்வு

தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு 6 வார கால தொழில் திறன் பயிற்சி ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது.

இதற்கான ஆட்கள் தேர்வு ஜூன் 2-ம் தேதி கடலூரில் நடக்கிறது.

மத்திய அரசின் சிறு, குறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிலைய உதவி இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பெண்கள், ஊனமுற்றோர் சுயதொழில் புரியும் வகையில் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடலூர் செம்மண்டலம் பாரத் கணினி மையத்தில் இந்த பயிற்சி ஜூன் 3-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை நடைபெறும்.

பயிற்சியில் தொழில் தொடங்கத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

குறைந்த முதலீட்டில் நடத்தப்படும் சில பொருள்களின் தயாரிப்பு குறித்துச் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும்.

கிளீனிங் பெளடர், சொட்டு நீலம், மெழுகுவர்த்தி, காகிதப் பொருள்கள், உணவு தயாரித்தல் போன்றவை செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.

வங்கிகளில் கடன் பெறுவதற்குத் திட்ட அறிக்கை தயாரித்தல், தொழிலை நிர்வகிக்கவும் தேவையான திறமையை மேம்படுத்துதல், அரசின் சலுகைகள், கடன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி.

18 முதல் 45 வயது வரை.

சேர விரும்புவோர் ஜூன் 2-ம் தேதி கடலூர் செம்மண்டலம் பாரத் கணினி மையத்தில் காலை 10 மணிக்கு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அவரிகளில் தேர்ந்து எடுக்கப்படும் 45 பேருக்கு 6 வார காலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

செவ்வாய், 12 மே, 2009

ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஓட்டளிக்க வசதிகள் தயார்

லோக்சபா தேர்தலில் பார்வையற்றவர்கள் ஓட்டளிக்க வசதியாக, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முதன் முறையாக, 'பிரைல் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது.

தேர்தலின் போது, வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் கொண்ட ஓட்டுச்சீட்டில் வாக்காளர்கள் முத்திரையிடும் முறை கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தது.

இந்திய தேர்தல் கமிஷன் பல்வேறு புதிய நடைமுறைகளைப் புகுத்தியது. இதில், ஓட்டுப்பதிவு இயந்திரம் முக்கியமானது.

2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் ஓட்டுப்பதிவு இயந்திரம் முழுமையாக்கப்பட்டது.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிப்பதும், ஓட்டு எண்ணுவதும் சுலபம்.

நாளை நடக்கும் தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுச்சீட்டுகள் பொருத்தப்பட்டு, சட்டசபை வாரியாக அனுப்பி வைக்கப்பட்டது.

தேர்தலுக்காக ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் தேவையான 80 வகையான பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஓட்டுச்சாவடியில் உள்ள படிகளில் உடல் ஊனமுற்றவர் எளிதாக ஏறிச் செல்ல வசதியாக, சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

கண் பார்வையற்றவர்கள் ஓட்டளிக்க வசதியாக ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் மற்றும் பட்டனுக்கு நடுவில், 'பிரைல் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது.

இந்த நவீன ஸ்டிக்கரில் சின்னங்களின் வரிசை எண்கள் 'பிரைல்' முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரிசை எண்களை வைத்து தாங்கள் விரும்பும் வேட்பாளரைத் தேர்வு செய்து, வரிசை எண்ணுக்கு நேராக உள்ள பட்டனை அழுத்தினால் வேட்பாளருக்கு ஓட்டு பதிவாகிவிடும்.

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள சின்னங்களின் வரிசையை பார்வையற்றவர்கள் அறிந்துகொள்ள, 'பிரைல்' முறையில் தயாரிக்கப்பட்ட புத்தகமும் ஓட்டுச்சாவடியில் இருக்கும்.

அதை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வாங்கி, வேட்பாளர் சின்னம் இருக்கும் வரிசையை அறிந்து கொள்ளலாம்.

இந்த நடைமுறை நடப்பு லோக்சபா தேர்தலில் தான் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.