ஞாயிறு, 19 மே, 2013

தி.மு.க.வினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்!



"சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' என்ற தலைப்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை துண்டுப் பிரசுரங்களாக திமுக இளைஞரணி சார்பில் அச்சடித்து  பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது. 

பரங்கிப்பேட்டை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ஒன்றிய தி.மு.க.செயலாளர் முத்து.பெருமாள் துவக்கி வைத்தார்.






இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் , நகர தி.மு.க. செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், வேலவன், கோமு, ஆரிபுல்லாஹ், அஜீஸ், கோவிந்தராஜ்  உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக் கொண்டு துண்டு பிரசுரங்களை கச்சேரித் தெரு, கீரைக்காரத்தெரு உள்ளிட்ட நெல்லுக்கடை தெரு உள்ளிட்ட இடங்களில் வழங்கினர்.

சனி, 18 மே, 2013

தயார் நிலையில் வத்தக்கரை மீன் ஏலம் விடும் தளம்


பரங்கிப்பேட்டை வத்தக்கரை அன்னங்கோவில் கடற்கரையில் ரூ.25 கோடி செலவில் மீன் ஏலம் விடும் தளம் உட்பட நவீன வசதிகள் தயார் நிலையில் உள்ளது.

கடலூர் மாவட்டம் கடலோர பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். பரங்கிப்பேட்டை கடலோர பகுதியான அன்னங்கோவில், முடசல் ஓடை, சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன் பேட்டை, அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம், கிள்ளை, முழுக்குதுறை, எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால் ஆகிய இடங்களில் உள்ள மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட பெரிய படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கட்டுமரங்கள் வைத்து மீன்பிடித்து வருகின்றனர். 

ஆனால், பரங்கிப்பேட்டை வெள்ளாற்றிலிருந்து கடலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. வெள்ளாற்றின் முகத்துவாரம் முற்றிலும் மணலால் சூழந்துள்ளது. இதனால் வெள்ளாற்றிலிருந்து கடலுக்கு படகுகள் கொண்டு செல்ல முடியவில்லை. 

இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் வெள்ளாற்றின் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, அன்னங்கோவில் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன் ஏலம் விடும் தளம், மீன் விற்பனை கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் போன்ற வசதிகளை செய்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன்படி, தமிழக அரசு சுனாமி அவசர கால நிதி திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி மூலம் சுமார் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக வெள்ளாற்றின் முகத்துவாரத்தை அழப்படுத்தி, அங்கு மணல் முகத்துவாரத்திற்குள் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

மேலும், அன்னங்கோவில் கடற்கரையில் படகு நிறுத்துமிடம், மீன் ஏலம் விடும் கூடம், மீன் உலர வைக்கும் தளம், உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் என பல வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்த புதிய வசதிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் தேர்வில் உடன்பாடு!















பரங்கிப்பேட்டை: கடந்த இரு வாரங்களாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை .   தேர்வு கமிட்டி மூலம் தேர்ந்தெடுப்பதா?தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதா என நிலவி வந்த குழப்பத்திற்கு இன்று விடை காணப்பட்டது. கேப்டன் ஹமீத் அப்துல் காதர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்  தலைவராகவும்  எம்.எஸ். முஹம்மது யூனூஸ் செயல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவரை தேர்ந்தெடுப்பதில் நிலவி வந்த சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது .
 
மற்ற நிர்வாகிகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.