புதன், 20 மே, 2009

கிரசென்ட் நல் வாழ்வு சங்கத்தில் துவங்கியது தட்டச்சு பயிற்சி

உலகமே கணினி மயமாகிவிட்ட இந்த காலத்தில் கிரசென்ட் நல் வாழ்வு சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு தட்டச்சு பயிற்சி முகாம் மாணவர்களிடம் அதிக வரவேற்பை பெற்று உள்ளது.

மிக ஆர்வத்துடன் மாணவ மாணவிகள் இந்த இலவச தட்டச்சி பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

கோடை விடுமுறையில் கணினி பயிற்சி மற்றும் தட்டச்சி பயிற்சி மிக பயனுள்ளதாக இருக்கின்றது என்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிதனர்.

Source: CWO / Friends PNO

மாநில அளவிலான கிரிக்கெட் கடலூரில் 30ம் தேதி துவக்கம்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 30ம் தேதி துவங்குகிறது.

கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், காஸ்மாபாலிடன் கிரிக்கெட் கிளப், மாவட்ட கிரிக்கெட் அகாடமி சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 30ம் தேதி துவங்கும் போட்டிக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்குகிறார்.

போட்டியில் பங்கேற்கும் அணிகள் வரும் 24ம் தேதிக்குள் பெயர், நுழைவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விவரங்களுக்கு கூத்தரசன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர், எண் 5, ஜட்ஜ் பங்களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 94425 21780 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவ இளைஞர்களுக்கு பயிற்சி! கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேச்சு!!

பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவி செய்ய தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் பேசினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் குறித்த கருத்தரங்கு கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.

இக் கருத்தரங்கினை தொடங்கி வைத்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசியதாவது:

தேசிய அளவிலும், மாநில அளவிலும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்படவுள்ள மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் இடம் பெறுவார்கள்.

சாமியார் பேட்டையில் பேரிடர் மேலாண்மை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதால் சுனாமி காலத்தில் பெரும் உயிரிழப்பு, பொருளிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை கிராமங்களில் ஒரு முனையிலிருந்து மறு முனை வரை வாழும் பொதுமக்களிடம் பேரிடர் காலத்தில் பேரிடர் வருவதை முன்கூட்டியே அறிந்து எடுத்துச் சொல்வதுடன் அதனிடமிருந்து காத்துக் கொள்ளும் வழிகளுக்கான சமூக விழிப்புணர்வு தயார் நிலையை, கலாசாரமாகக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்பட வேண்டும்.

பேரிடர் காலங்களில் கிராம மக்களுக்கு உதவிகளை செய்வதற்காக தனியார், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கிராம இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து பொது மக்களுக்கு உதவிகள் செய்யும் வண்ணம் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தனியார் தொண்டு நிறுவனங்களும் பேரிடர் காலங்களில் தங்களது ஒத்துழைப்பினை முழுமையாக வழங்கிட வேண்டும் என்றார்.

தூங்கிய அதிகாரிகளுக்கு கலெக்டர் 'செம டோஸ்':

கருத்தரங்கில் பங்கேற்று தூங்கிய அதிகாரிகளுக்கு கலெக்டர் 'டோஸ்' விட்டார்.

கருத்தரங்கில் சுனாமி, வெள்ளம், புயலால் பாதிப்பு குறித்தும், பேரிடரிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது பற்றியும் 'சீரியசாக' கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அதிகாரிகள் சிலர் நிம்மதியாக குரட்டை விட்டு நாற்காலியிலேயே தூங்கிக் கொண்டிருந்தனர்.

இதை கவனித்த கலெக்டர் ராஜேந்திர ரத்னு, அந்த அதிகாரிகளை எழுப்பி தாம் என்ன பேசினோம் என்பதை கூறுமாறு கேட்டார்.

தூங்கிய அதிகாரிகள் ஒன்றும் புரியாமல் 'திருதிருவென' விழித்தனர்.

உடனே கலெக்டர் அதிகாரிகளுக்கு 'செம டோஸ்' விட்டார்.

தொடர்ந்து கூட்டம் கலகலப்பாக நடந்தது.