வெள்ளி, 22 ஏப்ரல், 2011

பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் மத்திமீன் அதிகரிப்பு


தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் லாஞ்சில் சென்று மீன் பிடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிறிய படகில் மீனவர்கள் கடலோரம் மீன்களை பிடிப்பது வழக்கம்.இந்நிலையில் வியாழக்கிழமை பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் அருகே உள்ள பகுதியில் மத்திமீன் வருகை அதிமாகி தென்பட்டதால் மீனவர்கள் படகில் சென்று பிடித்தனர். அப்பகுதி மீனவர்கள் ஒரு படகில் சுமார் 3 முதல் 4 டன் வரை மத்திமீன்களை பிடித்தனர்.

இந்த மத்திமீன் ஒரு டன் ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, இந்த மீன்கள் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. இவையல்லாமல் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தீவனத்துக்காக இந்த மத்திமீனை வாங்கி காயவைத்து உலர்த்தி வைத்துள்ளனர். வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் காரணமாக இந்த மத்திமீன்கள் பரங்கிப்பேட்டை பகுதிக்கு படையெடுத்திருக்கலாம் என கடல்வாழ் உயிரின உயராய்வு மைய உதவிப் பேராசிரியர் டி.டி.அஜீத்குமார் தெரிவித்தாக தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
படம்: மாடல்

கிரிக்கெட் விளையாடிய போது தலையில் அடிபட்டு மாணவர் சாவு


பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகன் ராம்குமார் (18). இவர் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கீழே விழுந்ததில் ராம்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராம்குமார் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

திங்கள், 18 ஏப்ரல், 2011

வாலிபால் கோப்பையை வென்றது புதுவை அணி; பரங்கிப்பேட்டைக்கு 2-வது இடம்!

பரங்கிப்பேட்டை: வாத்தியாப்பள்ளி கைப்பந்து அணி மற்றும் பெரியதெரு இளைஞர்கள் சேர்ந்து நடத்திய மாநில அளிவிளான கைப்பந்து போட்டிகள் கடந்த இரண்டு தினங்களாக பரங்கிப்பேட்டை ராலி தோட்டத்தில் நடைபெற்று வந்தது. பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற்று வந்த இப்போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து பல்வேறு அணிகள் பங்கு பெற்றன. நேற்று இரவு நடந்த இறுதியாட்டத்தில் புதுவை பாரதி அணியும் பரங்கிகப்பேட்டை அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் புதுவை பாரதி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.




பரங்கிப்பேட்டை அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. மூன்றாவது பரிசு திருச்சி அணிக்கு கிடைத்தது. ரூ. 10,000 ரூ. 8,000 ரூ 7,000 என்று முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவரும் ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் பங்குபெற்று விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Photos: TNTJ-PNO