உஷார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உஷார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 மே, 2009

தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை...! தொடக்க கல்வியில் 'இங்கிலீஷ் மீடியம்' வருமா?

இன்றைக்கு கல்வி ஒரு மிகப் பெரிய வர்த்தக விஷயமாகிவிட்டது.

படித்தவர்கள் மட்டுமல்லாமல், பாமரர்களும் கூட, தங்கள் குழந்தைகள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாகவும், உறுதியாகவும் இருக்கின்றனர்.

உயர் கல்வி பெற்றால் மட்டுமே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை வளம் பெறும் என, பெரும்பாலான பெற்றோர்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

இதனால், தங்கள் குழந்தைகள் துவக்கத்தில் இருந்தே, தரமான கல்வி பெறும் வகையில், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து சேர்க்கின்றனர்.

இதனால், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புக்களில் கூட சேர்க்கைக்காக காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.

பெற்றோர்களை பொறுத்த வரையில், தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்த்தால் மட்டுமே அவை சிறப்பாக ஆங்கில அறிவு பெறும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

துவக்கத்தில் இருந்தே ஆங்கில அறிவு பெற்றால் மட்டுமே, தங்கள் குழந்தைகள் உயர் கல்வியில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள்; நல்ல நிறுவனங்களில் பணி கிடைக்கும்; அதன் மூலம் கூடுதல் சம்பளம் பெற முடியும் என்பது அவர்களின் எண்ணம்.

ஒரு வகையில், அவர்களின் எண்ணம் சரியானது தான்.

இன்றைக்கு, ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக உள்ளது.

முன்னைப் போல அல்லாமல், இன்றைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக வெளிநாடுகளுக்கு சென்று, பணிபுரிய வேண்டியுள்ளது.

எனவே, அலுவலக பணிக்கும், தகவல் தொடர்புக்கும் ஆங்கில அறிவு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஆனாலும், அதற்காக பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர்.

சராசரி மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு பெரும் சுமையாகவே மாறிவிடுகிறது.

குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர, 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில், தொடக்க கல்வியில் இங்கிலீஷ் மீடியத்தை கொண்டு வந்தால், இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இன்றைய நிலையில், அரசு பள்ளிகளில், தற்போது ஆறாம் வகுப்பு முதல் இங்கிலீஷ் மீடியம் உள்ளது.

சிறப்பு கட்டணம் செலுத்தினால், இங்கிலீஷ் மீடியத்தில் குழந்தைகள் படிக்கலாம். இந்நிலையில், தொடக்க கல்வியில் இருந்து இங்கிலீஷ் மீடியத்தை அறிமுகப்படுத்தினால், குழந்தைகள் முன்கூட்டியே ஆங்கில அறிவை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக கட்ட வேண்டிய கட்டாயமும் பெற்றோருக்கு ஏற்படாது.

'கமிஷன்' அடிப்படையில் ஷூ, யூனிபார்ம் விற்பனை : ஏஜன்ட்டுகளாக மாறிய மெட்ரிக் பள்ளிகள்

கட்டணக் 'கொள்ளை' மட்டும் போதாமல், கமிஷன் அடிப்படையில் ஷூ, யூனிபார்ம் போன்றவற்றையும், 'கமிஷன் ஏஜன்ட்'களைப் போல் விற்று 'சம்பாதிக்கும்' முயற்சியில் இறங்கி விட்டன சில தனியார் பள்ளிகள்.

தெருவுக்குத் தெரு தனியார் ஆங்கிலப் பள்ளிகள் புற்றீசல் போல் பெருக்கெடுத்து வருகின்றன.

கின்டர் கார்டன் பள்ளிகள், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு - பிளஸ் 2 வரை மெட்ரிக் பள்ளிகள் எனப் பெருகிவிட்டன.

ஒவ்வொரு பள்ளிகளும் தனித்தனியாக சீருடைகளை வடிவமைத்துள்ளன.

ஷூ, சாக்ஸ், டை, பெண் குழந்தைகள் என்றால் 'பெனேபாம்' என கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் வகையில் தான் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் மே, ஜூன் மாதங்களில் ஆண்டு கல்விக் கட்டணம் என ஆயிரக்கணக்கில் வசூலிப்பதுடன், நோட்புக்களுக்கு என தனிக் கட்டணமும் வசூலித்துக் கொள்கின்றன.

இது மட்டுமின்றி, ஒரு சில பள்ளிகள் தங்களிடம் தான் ஷூ, யூனிபார்ம் துணிகளை வாங்க வேண்டும், டெய்லர்களிடம் கொடுக்க பெற்றோர் விரும்பினால் அதற்கும் 'கட்'. 'நாங்கள் கை காட்டும் டெய்லரிடம் தான் யூனிபார்ம் தைத்துக் கொள்ள வேண்டும்' என்ற கட்டளை வேறு.

'சரி, சென்ற ஆண்டு வாங்கிய யூனிபார்ம் நன்றாக உள்ளது. இம்முறை வேண்டாம்' என்று கூறினால், அதை பள்ளி நிர்வாகம் செவி சாய்க்காமல், 'நோ, நோ... நீங்கள் கண்டிப்பாக யூனிபார்ம் வாங்கியாக வேண்டும். கடந்தாண்டு வாங்கிய யூனிபார்ம் அளவு சிறிதாகி விட்டால் என்ன செய்வது' என 'கண்டிஷன்' போடுகின்றனர்.

குறைந்தபட்சம் ஒரு யூனிபார்ம், ஒரு செட் ஷூ வாங்கியாக வேண்டும் என நிர்பந்திக்கின்றது பள்ளி நிர்வாகம்.

ஆனால், அவர்கள் வழங்கிய ஷூ, சீருடைகள் கொடுக்கும் பணத்திற்குத் தரமானதாக இல்லை என்பதே பெற்றோரின் ஆதங்கம்.

பள்ளியில் சேர்த்தாகி விட்டது, இனி வேறு பள்ளியில் சேர்த்தால் அங்கும் டொனேஷன், பீஸ் எனச் செலுத்தியாக வேண்டுமே என்பதால், பெற்றோர் பலரும் வேறு வழியின்றி தரமில்லாத ஷூ, யூனிபார்ம்களை வாங்கிச் செல்கின்றனர்.

'எதில் தான் இப்படிப் பணம் பார்ப்பது என்ற வரைமுறை கூட இல்லாமல் போய்விட்டது என்று ஆதங்கப்படுகின்றனர் பெற்றோர்.

தற்போது அதிக வேலை வாய்ப்பு மற்றும் சில சிக்கல்களில் உள்ள பெற்றோர், ஆண்டுதோறும் மே மாதம் வந்தாலே பயப்படும் அளவுக்கு இப்பள்ளிகள் வசூலை அதிகப்படுத்தி பயமுறுத்துகின்றன.

இந்த நிலை மாறுவது எப்போது என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகும்.

புதன், 20 மே, 2009

மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் முன் உஷார்! குறைந்த மதிப்பெண் கிடைக்கவும் வாய்ப்பு!!

பிளஸ் 2 மாணவர்கள், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பம் செய்யும் முன், பாட ஆசிரியரிடம் ஆலோசனை பெற்று அவசியம் தேவை என்றால் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால் கூடுதலாக மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என, கண்ணை மூடிக்கொண்டு விண்ணப்பித்தால், ஏற்கனவே பெற்ற மதிப்பெண்கள் குறைவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்கள் உடனடித் தேர்வு எழுதுவதற்கும், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.

விடைத்தாள் நகல் பெற்ற ஐந்து தினங்களுக்குள், மறுகூட்டலுக்கோ அல்லது மறுமதிப்பீடு கோரியோ மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் பலமுறை யோசிக்க வேண்டும்.

ஏற்கனவே எந்த ஆசிரியர் விடைத்தாளைத் திருத்தினாரோ, அதே ஆசிரியர் மீண்டும் மறுகூட்டல் செய்யவோ அல்லது விடைத்தாளைத் திருத்தவோ மாட்டார்.

இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் குழுதான், இப்பணிகளை மேற்கொள்ளும்.

சில மாணவர்களுக்குத் தவறுதலாக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கலாம்; சில விடைகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு விடைக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பெண்கள் மிகவும் அதிகம் என ஆசிரியர் கருதினால், மதிப்பெண்கள் குறையலாம்.

கவனமின்மையால் கூடுதலாகத் தரப்பட்ட மதிப்பெண்களும் குறைக்கப்படும்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டில் என்ன மதிப்பெண்கள் வருகிறதோ அதுதான் இறுதி மதிப்பெண்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
முந்தைய மதிப்பெண் ரத்தாகி விடும்.

அதிக மதிப்பெண்களுக்கு ஆசைப்பட்டால், இருக்கிற மதிப்பெண்களையும் இழக்கக் கூடிய அபாயம் இதில் இருக்கிறது.

எனவே, மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற்றதும், பெற்றோர் மற்றும் பாட ஆசிரியரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படுவது நல்லது.