சனி, 6 டிசம்பர், 2008

ஆட்டிறைச்சி கடும் விலை உயர்வு


இந்திய சந்தையில் விலையேற்றத்திற்கு பெயர் போன பெட்ரோல்-டீசல் விலை சற்று குறைந்துள்ள நிலையில், பரங்கிப்பேட்டையில் தற்போது ஆட்டிறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது சின்னகடை மார்க்கெட்டில் இறைச்சி கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹஜ் பெருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதினால் ஆட்டு கிடாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பினால் போக்குவரத்து சற்று தடைபட்டதும் ஒரு காரணமாய் அமைந்திருக்கிறது.

பாம்பு.. பாம்பு....

இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு மீராபள்ளி கபறுஸ்தான் அருகில் சுமார் ஐந்து அடி நீளமுள்ள மிக தடிமனான நல்ல பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது.
( பாம்பு கடித்தால் தான் நியூஸ் அதை அடித்தால் என்ன நியூஸ் என்று இந்த பதிவுக்கு ஒரு கமண்ட்டை எதிர்பார்ப்போம். )

வெள்ளி, 5 டிசம்பர், 2008

மீண்டும் ஒரு புயல் சின்னம்!


வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிஷா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதில் பரங்கிப்பேட்டை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

கடந்த சில நாட்களாகத் தான் மழை நின்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் வங்க கடலில் இந்தோனேசியாவுக்கு வட மேற்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

அது தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சனிக்கிழமை வாக்கில் சென்னைக்கு அருகே வந்து விடும் என்பதால் அன்று இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் மழை ஆரம்பிக்கவுள்ளது.

சமீபத்திய புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பே இன்னும் விலகாமல், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் உருவாகியுள்ள புயல் குறித்த செய்தி பரங்கிப்பேட்டை மக்களை, குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.