வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 மார்ச், 2009

கடும் மணற்புயல் : ரியாதிலும் வானிலை மாற்றம்




மாறிவரும் வானிலை பரங்கிப்பேட்டையில் குளுமையை ஏற்படுத்த, ரியாதிலோ கடும் மணற்புயல். வாகனத்தில் செல்பவர்களுக்கு எதிரே உள்ளது/வருவது தெரியாத அளவுக்கு
கடும் மணற்காற்று வீசுகிறது.
வெளியே தலைகாட்ட முடியவில்லை.

சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. சாலைகளில் தத்தம் முகப்பு விளக்குகளின் ஒளிரும் வெளிச்சநம்பிக்கைகளைப் பற்றி நகரும் வாகனங்களுக்கு எறும்பினும் சற்றே வேகம் அதிகம்.
சில, பல விமான சேவைகளும் விலக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த மணற்புயலைப் போல கடந்த வருடங்களில் கண்டதில்லை என்று ரியாத் வாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2008

வெள்ள நிவாரணத்தொகை: ஒரு அதிருப்தி சம்பவம்.

பரங்கிப்பேட்டை மாதாகோவில் பகுதியில் சமீப வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சலங்குக்கார தெரு அரசு பள்ளியில் நடைபெற்றது. வெள்ளத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பகுதிவாழ் 363 பேருக்கு ரூ.2000 என்ற அளவிலும், பகுதியளவு பாதிக்கப்பட்ட 45 பேருக்கு ரூ.1000 என்ற அளவிலும் உதவித் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் அதிருப்தியடைந்த சரவணன் என்ற வாலிபர், அனைவருக்கும் ரூ.2000 வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் பயனாளிகள் பெயர்பட்டியலை எடுத்துச்சென்று விட்டாராம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் அசோகன் என்பார் உடனடியாக காவல்துறையில் முறையீடு செய்ய, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஊரிலிருந்து எமது செய்தி முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்செய்தி நாளேடுகளில் வந்துள்ளதாம்.

வெள்ளி, 5 டிசம்பர், 2008

மீண்டும் ஒரு புயல் சின்னம்!


வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிஷா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதில் பரங்கிப்பேட்டை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

கடந்த சில நாட்களாகத் தான் மழை நின்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் வங்க கடலில் இந்தோனேசியாவுக்கு வட மேற்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

அது தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சனிக்கிழமை வாக்கில் சென்னைக்கு அருகே வந்து விடும் என்பதால் அன்று இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் மழை ஆரம்பிக்கவுள்ளது.

சமீபத்திய புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பே இன்னும் விலகாமல், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் உருவாகியுள்ள புயல் குறித்த செய்தி பரங்கிப்பேட்டை மக்களை, குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

செவ்வாய், 25 நவம்பர், 2008

வரலாறு காணாத மழை




ஊரில் இன்று வரலாறு காணாத மழை பெய்துகொண்டிருக்கிறது.
டெல்லிசாஹிப் தர்கா பகுதியில் வசிக்கும் சுமார் 350ஏழை முஸ்லிம் குடும்பங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.



ஜமாஅத் அவர்களை பத்திரமாக வெளியேற்றி ஷாதிமஹலில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கான உணவு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

இயற்கைச்சீற்றத்திலிருந்து நாம் அனைவரும் இறைவனிடம் பாதுகாவல் தேடுவோமாக.

ஏழைக்குடும்பங்களுக்கான உணவு ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக உதவ நினைக்கும் நம் சகோதரர்கள் யாரும், விரும்பினால், விரைந்து ஜமாஅத்தை அணுகவும்


தகவல்: R.தவ்ஹீத்

வியாழன், 23 அக்டோபர், 2008

இது ஒரு மழை காலம் ....

கடந்த பத்து நாட்களாக திடீர் திடீர் என பயங்கர இடி மின்னலுடன் பெய்து வரும் மழை இன்று கொஞ்சம் விடுமுறை எடுத்து கொண்டது. (வானில அறிக்கையில் இன்று மழை பெய்யும் என்று சொல்லி இருந்ததை மழை கேட்டு இருக்கலாம்)

வழக்கமாக அதகளமாகி கலங்கடிக்கும் பெரிய தெரு புதிய சாலை மற்றும் வடிகால் வசதி உபயத்துடன் படு சுத்தமாக நல்ல பிள்ளையாக அளித்த காட்சி கண்கொள்ளாதது (குறைந்த பட்சம் 2 தலைமுறை மக்கள் காணாத காட்சி) ஆனால் பிளை ஓவர் உயரத்துக்கு போடப்பட்டு இருக்கும் சில சிமென்ட் சாலைகளினால் அதனை அடுத்த சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. குறிப்பாக காஜியார் சந்து முனை, யாதவாள் தெரு- பெரிய தெரு இணையும் இடம், தெசன் தைக்கால்-ராயல் தெரு முனை, ஹக்கா சாஹிப் தெரு, மதினா நகர் போன்ற சில இடங்கள் குறிப்பிடத்தக்கவை.


ஊரின் ஒரே ஒழுங்காக பராமரிக்கப்படும் குளமான மீராபள்ளி குளம் சில மாதங்கள் முன்பு கரை சரிந்து கிடந்ததை சரி செய்ய நிர்வாகம் நேரம் பார்த்து கொண்டுஇருந்த நேரத்தில் (இன்னும் சில அடிகள் குறைந்தால் போதும் என்று) நமது மழையார் வந்து முழு குளத்தையும் நிரப்பி சம தளமாக்கி விட்டார்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

இறைவனின் அருட்கொடை

நேற்றுவரை கோடைக்காலத்தைவிட கொடுமையாய் வெயில் வாட்டி வருத்து எடுத்து கொண்டிருந்தது. சென்ற மாதம் கடைசியிலே எதிர்பார்க்கப்பட்டு, பொய்த்துவிடுமோ என்று கவலை பூக்கும் நேரத்தில் இடி மின்னல் மேல தாளத்துடன் இன்று துவங்கியது பருவ மழை.

பூமியையும் அதில் வாழும் உயிர்களையும் உயிர்ப்பிக்கும் அழகிய மழையின் மூலம் தன் அளவற்ற கருணையை சுவைக்கும் படி செய்த அல்லாஹுவிர்க்கே புகழனைத்தும்.

மின்சாரம் எனும் அருட்கொடையை சீரியல்களில் மூழ்கியும் டிவிடிக்களில் படம் பார்த்தும் அதிரவிட்டும் வீணடித்து இன்று அதனால் அவதியுறும் நாம் - விரைவில் வரவிருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு இந்த மழையை எப்படி திட்டமிட்டு சேமித்து வைக்க போகிறோம் என்பதை யோசிப்போமா?

புகைப்பட நன்றி கு.நிஜாமுதின் (ஜி.என்) அவர்கள்

வெள்ளி, 25 ஜூலை, 2008

அதிரடி மழையால் பரங்கிப்பேட்டை சிலு சிலு.

பரங்கிப்பேட்டையில் நிலவி வந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்று இரவு அதிரடியாக நல்ல மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையினால் இன்று காலை வெப்பம் குறைந்து சிலுசிலுவென உள்ளது. நேற்று இரவு மழை பெய்தபோது மினசாராம் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

திங்கள், 9 ஜூன், 2008

தகவலுக்காக

ஊரில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய கனத்த மழைப் பெய்துள்ளது. மின் வசதி துண்டிக்கப்பட்டு விட்டதால் வழக்கம் போல மக்களுக்கு அவதி.

புதன், 14 மே, 2008

மழை

கடந்த இரண்டு நாட்களாக பரங்கிப்பேட்டையில் மிகக் கடுமையான காற்று வீசிக் கொண்டிருக்கி்ன்றது. மின் வசதி பல மணி நேரம் துண்டிக்கப்பட்டு மக்கள் சங்கடத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அவ்வப்போது மழையும் பெய்துவருகின்றது.

திங்கள், 24 மார்ச், 2008

மழையால் மீராப்பள்ளி குளம் பாதிப்பு


பரங்கிப்பேட்டையில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாலைகளும் சேதமடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான நிவாரண பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்த மழையினால் மீராப்பள்ளி குளத்தின் கபரஸ்தானை ஒட்டியுள்ள பக்கச்சுவர் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதற்கு மீராப்பள்ளி நிர்வாகம் உடனே நடவடிக்ககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்

சனி, 22 மார்ச், 2008

பரங்கிப்பேட்டையில் நேற்று 36 மி.மீ மழை பதிவு

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த நிலையால் பரங்கிப்பேட்டையில் நல்ல மழை பெய்ததது. இதனால் பரங்கிப்பேட்டையின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று பதிவான அளவின்படி 36 மி.மீ மழை பெய்துள்து. தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றியிருக்கும் விவசாயிகளுக்கும் இம்மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே பரங்கிப்பேட்டையில் அதிக மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 12 மார்ச், 2008

பரங்கிப்பேட்டையில் மழை - இயல்பு வாழ்கை பாதிப்பு.





மார்ச் 12 :பரங்கிப்பேட்டையில் கடந்த ஒரு வாரமாக நிலவிவரும் வெப்பத்தை தணிக்கும் விதமாக நேற்று ஆரம்பித்த மழை தொடர்ந்து கடுமையாக பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கபட்டுள்ளது.இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டது. வெளியூர் செல்லும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர் .வங்ககடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.