புதன், 20 மே, 2009

பரங்கிப்பேட்டை, கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

பரங்கிப்பேட்டை, கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளாறு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த பரங்கிப்பேட்டை, கிள்ளை ஆகிய பேரூராட்சிகளின் குறுக்கே மிகப்பெரிய வெள்ளாறு செல்கிறது.

இந்த வெள்ளாறு வழியாக கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டை பொது மக்கள் படகு மூலம் சென்று வந்தனர்.

மழைக் காலங்களில் வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

அப்போது படகுகள் செல்வது நிறுத்தப்படும்.

இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், வியாபாரிகள் சிதம்பரம் வண்டிகேட், புவனகிரி வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பரங்கிப்பேட்டைக்கு சென்று வந்தனர்.

இதே போல் பரங்கிப்பேட்டை பகுதி மக்களும் சிதம்பரம் வந்து தான் கிள்ளைக்கு சென்று வந்தனர்.

ரூ.16 கோடி

இதனால் இந்த 2 பேரூராட்சிகளில் உள்ள மக்கள் கிள்ளை- பரங்கிப்பேட்டையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான பணிகள் டெண்டர் விடப்பட்டு கடந்த 2 மாதமாக நடந்து வருகிறது.

இதில் சுமார் 1/2 கிலோ மீட்டர் தூரம் வெள்ளாற்றை முற்றிலும் மணல் கொட்டி தண்ணீர் வராமல் தடுத்துவிட்டனர்.

பின்னர் பில்லர் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்த பில்லர் 150 அடி ஆழம் கொண்டதாக அமைக்கப்பட்டு வருகிறது.

ராட்சத இரும்பு

தற்போது இரவு, பகலாக பெரிய ராட்சத இரும்பு கம்பிகள் மூலம் பில்லர் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

இந்த பணியில் 5-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரிகள், ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் இந்த வேலைகள் வருகிற மழைக் காலத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 19 மே, 2009

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: நாளை முதல் வினியோகம்!

ஆசிரியர் பயிற்சிப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் மாநிலம் முழுவதும் வழங்கப்படுகின்றன.

இது குறித்து, ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் கூறியிருப்பதாவது:

அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள அனைத்து இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் 60 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 50 சதவீத இடங்களும், அரசு உதவி பெறாத தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாகங்கள் சரண் செய்யும் இடங்களும் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படும்.

பிளஸ் 2 தேர்வில் 45 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், வரும் கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

மாவட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் நாளை முதல், ஜூன் 3ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்கள் 250 ரூபாய்க்கும், இதர வகுப்பைச் சேர்ந்தவர்கள் 500 ரூபாய்க்கும், 'இயக்குனர், டி.டி.இ.ஆர்.டி., சென்னை-6' என்ற பெயரில் டி.டி., எடுத்துக் கொடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 3ம் தேதி மாலை 5.45 மணிக்குள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்வி நிறுவனங்களில் 40 ஆயிரம் இடங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு 21 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டது.

நடப்பாண்டில் புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டால், கவுன்சிலிங் இடங்கள் மேலும் அதிகரிக்கும்.

பன்றிக் காய்ச்சலை அறிந்து கொள்ள 24 மணி நேர கண்காணிப்பு மையம்

பன்றிக் காய்ச்சல் தொற்று குறித்து கண்காணிக்க, தெரிந்து கொள்ள 24 மணி நேர அவசர கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விமான நிலையங்கள், துறைமுகங்களில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளை தமிழக மருத்துவக் குழுவினர் தீவிரப் பரிசோதனை செய்கின்றனர்.

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனரகத்தின் சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கண்காணிப்பு மையம் பன்றிக் காய்ச்சல் தொற்று குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

044-24321569 என்ற தொலைபேசி எண்ணில் பன்றிக் காய்ச்சல் நடவடிக்கை குறித்த விவரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து கோவை வந்துள்ள தாய், மகன் இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாக சந்தேகம் வந்தது. அவர்களது ரத்த மாதிரிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.