ஞாயிறு, 13 மார்ச், 2011

சிதம்பரம் தொகுதி தி.மு.க.,வில் ஆதரவாளர்களுக்காக 50 பேர் மனு

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க.,வில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் மனு கொடுத்துள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் கேட்டு வருகின்றனர்.

தி.மு.க., சார்பில் போட்டியிட ஒன்றியக்குழு தலைவர்கள் செந்தில் குமார், முத்து பெருமாள், மாமல்லன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் உட்பட 31 பேர் சீட்டு கேட்டு விருப்பமனு கொடுத்துள்ளனர்.

அதில் செந்தில் குமார், முத்து பெருமாள், மாமல்லன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணனுக்கு என ஒவ்வொருவருக்கும் 10க்கும் மேற்பட்டோர் பரிந்துரை செய்து கட்சி தலைமையில் மனு கொடுத்துள்ளனர்.

Source: Dinamalar

ஐக்கிய ஜனதா தளம் நிர்வாகிகள் சிதம்பரம் உட்பட 9 தொகுதிகளில் விருப்ப மனு தாக்கல்

நெய்வேலி: கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய ஜனதாதள மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நெய்வேலி இந்திரா நகரில் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் திருவாசகமூர்த்தி, துணைத் தலைவர் சரவணன், பொருளாளர் ராஜேந்திரன், செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கரன், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதியில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. அதன்படி கடலூர் தொகுதிக்கு பாஸ்கரன், பண்ருட்டி சரவணன், நெய்வேலி சங்கர், குறிஞ்சிப்பாடி திருவரசமூர்த்தி, புவனகிரி மணிமாறன், சிதம்பரம் இப்ராம்பால், காட்டுமன்னார்குடி (தனி) சின்னையன், திட்டக்குடி (தனி) ராஜேந்திரன், விருத்தாசலம் தொகுதிக்கு பன்னீர்செல்வம் ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

இவர்களது மனுக்கள் மாநிலத் தலைவர் ராஜசேகரன் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Source: Dinamalar

சிதம்பரம் எங்களுக்குத்தான்: காங்., நிர்வாகிகள் நம்பிக்கை

சிதம்பரம் சட்டசபை தொகுதியை காங்., பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 1951, 57, 62, 67 மற்றும் 1991ம் ஆண்டு தேர்தலில் காங்., சிதம்பரம் தொகுதியை தக்க வைத்திருந்தது. 96ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா., வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்று வந்தனர்.

2011ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்., கட்சியினர் பெற தீவிர முயற்சி மேற்கொண்டு கடந்த மாதம் முதல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டனர். தற்போது சிதம்பரம் மற்றும் வாசன் ஆதரவாளர்கள் சிதம்பரம் தொகுதியை பெற மீண்டும் தீவிர முயற்சியில் உள்ளனர்.

Source: Dinamalar