திங்கள், 13 பிப்ரவரி, 2012

வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? பரங்கிப்பேட்டை த.த.ஜ. பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை: எதிர்வரும் பிப்ரவரி 14-ந்தேதியன்று மாவட்டத் தலைநகர் கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற உள்ள வாழ்வுரிமை மாநாடு குறித்து தெருமுனைப் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது.

சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் நேற்று மாலை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கு பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், போராட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டது.

அப்துல் மஜீத் உமரி உரை நிகழ்த்திய, இப்பிரச்சாரக் கூட்டத்தில் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாஜல் உசேன், முத்துராஜா, ஹசன் அலி, முஜீப் சாஹுல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பதவியேற்பு விழா துளிகள் (படங்களுடன்)


:::: 10.20-க்கு தொடங்கிய விழா 11.55-க்கு நிறைவுபெற்றது.

:::: 10.40-க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது

:::: மவ்லவி கபீர் அஹமது மதனி, வழக்கறிஞர் செய்யது அன்சாரி, சிதம்பரம் மூசா, கேப்டன் ஹமீது ஆகியோர் தலா 10 நிமிடங்கள் உரையாற்றினார்கள்.

:::: சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன் 10.45க்கு வருகை தந்தார்.
:::: சால்வை அணிவிக்க வந்தவர்களை தன் கையில் கொடுக்கும்படி தலைவர் நூர் முஹம்மது கேட்டு கொண்டார். அதனால் யாரும் சால்வைகள் போர்த்தவும் இல்லை – யாருக்கும் போர்த்தப்படவும் இல்லை.
:::: கேப்டன் ஹமீது ஜமாஅத் நிதிக்கு காசோலை மூலம் ரூ12,000 வழங்கினார்.

:::: விழாவில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட முன்னாள் ஜமாஅத் நிர்வாகிகள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை.

:::: முன்னாள் அமைச்சரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வி இராமஜெயம் வருகை தரவில்லை.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினர் அருள்முருகன் கலந்துக்கொண்டார்.

:::: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் பாண்டியத்துரை கலந்துக்கொண்டார்.

:::: நகர தி.மு.க.அவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் கலந்துக்கொண்டார்.

::::தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

:::: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி பிலால், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) நிர்வாகி ஹாஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் செழியன் மற்றும் ஆரியநாட்டு சலங்குகாரத்தெரு பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

:::: மாதக்கோயில் தெரு பஞ்சாயத்தார்கள் கலந்துக்கொண்டனர்

:::: பரங்கிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் கலந்துக்கொண்டார்.

:::: சிதம்பரம் தாலுகா காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி பற்கேற்கவில்லை

:::: அழைப்பிதழ் வழங்குவதற்கு பொறுப்பேற்றவர்கள் செய்த குளறுபடியால் சில முக்கியஸ்தர்களுக்கு அழைப்பிதழ் விடுப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது

:::: கா.மு.கவுஸ் நன்றியுரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டு இறுதியில் மாற்றம் செய்யப்பட்டதால் ஆவேசமுற்ற கா.மு.கவுஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அதுப்பற்றி குரலெழுப்பிய போது தலைவர் டாக்டர் நூர் முஹம்மது அவரை சமாதானப்படுத்தினார்.
:::: பதவி ஏற்பு விழா முடிவடைந்து சற்று தாமதமாக வந்த பான்மல், டாக்டரை சந்தித்து வாழ்த்து கூறினார்.

:::: இரு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டி இருந்ததால் நிகழ்ச்சி சற்று விரைவாக முடிக்கப்பட்டது.
:::: 11.38-க்கு தொடங்கிய தனது ஏற்புரையை டாக்டர் 11.50-க்கு நிறைவு செய்தார்.

:::: நன்றியுரைக்கு பின்னர் வந்திருந்தோர் டாக்டரை கட்டித் தழுவி தங்களது ஸலாத்தினையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

:::: தாயகம் வந்திருக்கும் பஷீர் அஹமது (தம்மாம்), குலாம் ஜெய்லானி மியான் (குவைத்), ஹுஸைன் (ரியாத்) உள்ளிட்ட வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்களின் அமைப்பு பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

:::: விழா முடிவில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


:::: மாலை 6 மணிக்கு ஜமாஅத்தின் முன்னாள் நிர்வாகிகள் ஜமாஅத் அலுவலகத்தை திறந்து, புதிய நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.


களத்தொகுப்பு: ஹம்துன் அப்பாஸ் / MGF

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

பதவியேற்றார் டாக்டர் நூர் முஹம்மது: updated...


பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் S.நூர் முஹம்மது பதவியேற்கும் நிகழ்வு இன்று காலை பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் தொடங்கியது மீராப்பள்ளி இமாம் மவ்லவி அஹமது கபீர் காஷிபி அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.
மர்ஹபா கல்வி அறக்கட்டளை நிர்வாகி Z.பஜ்லுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மவ்லவி M.H.கபீர் அஹமது மதனி பேசுகையில் ஒற்றுமையை வலிறுத்தினார்.
பின்னர் டாக்டர் S.நூர் முஹம்மது-விற்கு வழக்கறிஞர் M.E.செய்யது அன்சாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து வழக்கறிஞர் அன்சாரி பேசுகையில், ஜாதி - மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஜமாஅத் பாடுபட்டு வருகின்றது. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பில் வேலை வாய்ப்பிலும், ஒப்பந்த பணிகளிலும் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட தலைவர் பாடுபட வேண்டும். ரியல் எஸ்டேட்டில் உரிமை பெறாமல் பல இடங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே அவ்விஷயத்திலும் தலைவர் கவனம் செலுத்த வேண்டும். ஜமாஅத் சொத்து என்பது பொதுச் சொத்து ஏழை - எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார்.
பின்னர் சிதம்பரம் பள்ளிவாசல் நிர்வாகி இப்ராம்சா (எ) மூசா, கேப்டன் M.ஹமீது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
வாழ்த்துரை வழங்கிய சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன், "பல்வேறு திருமண நிகழ்ச்சிகளின் காரணமாக தாமதமாக வர நேரிட்டமைக்கு முதலில் வருத்தம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், பதவி என்பது சுமை. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காணப்படுகிறது. உணவில் எப்படி பல வகைகள் இருந்தால் தான் சுவையாக இருக்குமோ, அதுப்போலவே வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்தால் தான் சிறப்பு. மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி கலவரம் உண்டு பண்ணி ஏராளமான சிறுபான்மையினர் உயிரிழக்க காரணமாக இருக்கின்றனர். எல்லா மதங்களும் எப்படி வாழ வேண்டும் என்று சொல்கிறது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், அன்பை வளர்க்க வேண்டும்.

பரங்கிப்பேட்டையில் நாலு வீதிகளில் மாடி வீடுகள் இருக்கிறது. இப்பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட போது தான் தெரிந்தது. இருப்பதற்கு கூட இடமில்லாத ஏழை மக்கள் இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் மேட்டு குடி அல்ல அது தவறான பார்வை, மிகப்பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தினக்கூலிகளாக பீடி சுற்றும் தொழிலாளிகளாக இருக்கின்றனர். இஸ்லாமியர்கள் பற்றி தவறான எண்ணம் இருக்கிறது. நீதிபதி சச்சார் கமிட்டி மட்டுமே இஸ்லாமியர்களின் உண்மை நிலையினை சொல்கிறது.

இப்பகுதி இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக ஜமாஅத் சார்பில் கம்ப்யூட்டர் மையம் தொடங்க வேண்டும். அரசின் சார்பில் தொடங்கிட முந்தைய ஆட்சியரிடம் கேட்டு கொண்டிருந்தேன். இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற குறளுக்கேற்ப டாக்டர் நூர் முஹம்மதிற்கு இந்த பொறுப்பு வந்துள்ளது என்றார்.

ஏற்புரை வழங்கிய டாக்டர் நூர் முஹம்மது, இன்று கேப்டன் ஹமீது அப்துல் காதர் ஜமாஅத்திற்கு நிதியுதவி வழங்கினார். நம்மில் நிறைய பேர் வசதியாக இருக்கிறார்கள், அவர்களும் ஜமாஅத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். விரைவில் பொதுக்குழுவில் எல்லா விவரங்களையும் தெரிவிக்கிறேன் என்றார். நம் சுயமரியாதைகளை நாம் இழக்காமல் இருக்க வேண்டும். மாற்று மத சகோதரர்களுடன் சுமுகமாக பழகி நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஜமாஅத்தில் ஒற்றுமைக்கு மட்டுமே முன்னுரிமை. பைத்துல்மால் ஏழை மக்களின் நிதி, அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது தான் குறிக்கோள்.

கல்விக்குழு ஒன்று அமைக்கப்படும் ஏழை மக்களுக்கு மட்டுமின்றி நடுத்தர மக்களுக்கும் கல்விக்காக உதவி செய்யப்படும். இளைஞர்கள் இந்த நாட்டின் தூண்கள், அவர் வேறு பாதையில் சென்று விடாமல் இருக்க இளைஞர் குழு அமைக்கப்படும். அரசின் திட்டங்கள் நிறைய இருக்கிறது, அதை மக்களுக்கு பெற்று தர வழிவகை செய்யப்படும். ஷரீஅத் குழு ஒன்று அமைக்கப்படும் அது நூற்றுக்கு நூறு ஷரீஅத் சட்டப்படி செயல்படும். எவ்வித பரிந்துரைக்களுக்கும் அங்கு இடமில்லை என்று கூறி தனது ஏற்புரையை நிறைவு செய்தார்.





பின்னர் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பைத்துல்மால் நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்து அறிமுகம் செய்தார். ஜமாஅத் / பைத்துல்மால் நிர்வாகிகள் எழுந்து நின்று கூடியிருந்தோர்களுக்கு ஸலாம் சொல்லி அமர்ந்தனர்.

இறுதியில் ஜமாஅத் துணைத்தலைவர் O.A.W.பாவாஜான் நன்றியுரையாற்றினார்.

விழாத்துளிகள் விரைவில் பதிவிடப்படும்

களத்தொகுப்பு: MGF / ஹம்துன் அப்பாஸ்