வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

அசர் மல்லி - நறுமணங்களின் முகவரி

 நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை அல்லது இரவுக்குள் மடிந்து விடும், வதங்கி விடும். 

ஆனால் பொழுது சாயும் நேரத்தில் பூக்கும் பூ ஒன்று உள்ளது தெரியுமா?

ஊரே உறங்கும் நேரத்தில் இரவு வாட்ச் மேனாக,ஆந்தை விழித்திருப்பது போல், அந்தி சாய்ந்து அனைத்தும் மலர் வகைகளும் உறங்கும் நேரத்தில் அடர்த்தியான ரோஸ் ,வெள்ளை மற்றும் மஞ்சள் என்று அழகிய மூன்று வித வண்ணங்களிலும், அந்த மூன்று வித வண்ணங்களும் கலந்து ஒட்டுச் சாதி போன்று ஒன்றும் என நான்கு விதங்களில் பூக்கும்.

இரவெல்லாம் கொட்ட, கொட்ட விழித்திருந்து காலையில் உறங்கி போகும்.

தமிழில் அந்திமல்லி அல்லது அந்திமந்தாரை என்று அழைப்பார்கள். மலையாளத்தில் 'அசர் முல்ல' (முல்லை தான் அது அந்த மொழியில் 'லை' என்ற பதத்தை அழுத்தி  சொல்ல மாட்டார்கள்) நம்ம ஊரில் அசருக்கு பிறகு பூப்பதால் அசர் மல்லி என்று அழைக்கிறார்கள்?! என்று நினைக்கிறேன்.


சிறு வயது முதல் அப்படி அழைத்தே பழகி விட்டது அதனால் வேறு காரணங்கள் தெரியவில்லை. அதன் தாவரவியல் பெயர் Mirabilis Jalapa Linn என்கிற வகையை சார்ந்தது.

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

தீன்! தீன்!

முஹம்மது நானா இருக்காங்களா? என அஹமது அவர் வீட்டின் கதவின் கொலுக்கை தட்டி பதட்டமாக கேட்டான்..

அரண்மனை சுவர் போல பர்மா தேக்கில் செய்த கதவில் ஐந்து கிலோ எடையுள்ள கொலுக்கு தொங்கியது. கதவை தட்டும் போது தவறி கொலுக்கின் நடுவில் கையின் விரல் சிக்கினால் சின்னாபின்னாமாகி விடும் போன்று பிரமாண்டமாக தொங்கிக் கொண்டிருந்தது முஹம்மது நானாவின் வீட்டு அழைப்பு மணி.

இரண்டு கட்டுக்களுடன் அமைந்துள்ள வீடு வேறு, நம் குரல் உள்ளே வரைக்கும் எட்டியிருக்குமா? என அவன் எண்ணும் போது...

யாரு..?  கொஞ்சம் இரிங்க..! நானா கொல்லையிலே இருக்காங்க, வருவாங்க சொல்லிருக்கேன் என்று உள் கட்டிலிருந்து பதில் வந்ததும்.. அவன் கொஞ்சம் திருப்தி அடைந்து அவர் வரும் வரை முஹம்மது நானா வீட்டு திண்ணையில் அமர்ந்தான் அஹமது.

ஆனால் அவனின் மனம் மட்டும் ஒருவித பதட்டதுடன் காணப்பட்டது. 

காரணம் அடுத்த வாரம் அஹமதுக்கு சுன்னத்(கத்னா) என்று வீட்டில் கூறியதும் அவனுடைய நட்பு வட்டங்களில் உள்ள சுன்னத் செய்யாத நண்பர்கள்  அவன் மனதில் சுன்னத் பற்றிய பலவித குழப்பங்களை  ஏற்படுத்தி விட்டார்கள் அதையே நினைத்து அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தோளில்  தட்டி சொல்லுங்கனி.. என்ன விஷயமா தேடி வந்திருக்கியும்.? என்று முஹமது நானா அவன் நினைவை கலைக்கவும்...

உங்கள்'ட்டே ஒன்னு கேக்கலாம் வந்தேன் நானா, நீங்க தான் சொல்லனும் என தயங்கவும்..

சொல்லுங்கனி.. பிரோட்டு (டியூசன்) ஏதாவது எடுக்கனுமா?

இல்ல நானா எனக்கு  அரை பரீட்சை லீவுலே அடுத்த வாரம் சுன்னத் செய்ய போறதா சொன்னாஹோ அதுதான் உங்கள்ட்டே டவுட்டு கேட்டு போலாம்னு வந்தேன் என அஹமது சொன்னதும்...


முஹம்மது நானாவின் முகம் லேசான சுருக்கம் அடைந்தது. அது ஆச்சிரிய சுருக்கமா, கோப சுருக்கமா? அஹமதுக்கு விளங்காத போது, வெடிச் சிரிப்பாக சிரித்து, இதுலே என்ன டவுட்டுங்கனி ? என்றார் முஹம்மது நானா.

அஹமது உனக்கு சுன்னத்தா செய்றாஹ? அப்ப உனக்கு இருக்கு என்று கூட்டாளிவோல்லாம் பயமுறுத்திட்டானுவோ நானா. அதுதான் சுன்னத் செஞ்சா உசுரு போகுற மாதிரி வலிக்குமா நானா?

புதன், 25 டிசம்பர், 2024

ஆழிப்பேரலை 20 ஆம் ஆண்டு!

2004-2024

சுனாமி (ஆழிப்பேரலை)  என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் தாக்கியதாக ஒரு தகவல் சொல்லப்பட்டு இருந்தாலும், 2004-க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு சுனாமி என்பது எவ்வளவு பேரழிவு ஏற்படுத்தியதையும், அதனால் ஏற்பட்ட பெரிய தாக்கத்தையும் கண்டு அறிந்ததில்லையோ அதுபோல் நமக்கும் அது ஒரு செய்தியாகத்  தான் இருந்திருக்கும்.  

(ஒரு பிரபல நாளிதழ் கூட பெயர் தெரியாமல் அடுத்த நாள் 'தமிழகத்தை தாக்கிய டி-சுனாமி' என்று செய்தி வெளியிட்டது )

பாவம் அவர்களுக்கே தெரியவில்லை.

ஆனால் 2004 டிசம்பர் 26 அன்று காலை 8 மணிக்கு மேல் தமிழக கடற்கரையைச் சார்ந்த மக்கள் கண்டுக் கொண்டார்கள்.

மழை வெள்ளத்தால் படிப்படியாகத் தண்ணீர் வந்ததைப் பார்த்திருக்கலாம்.

கடல் தண்ணீர் ஊருக்கு வந்ததைக் கூட சிலசமயம் பார்த்திருக்கலாம்.

ஒரே மூச்சில் சுமார் 30 மீட்டர்(100அடி) வெள்ளம் இரண்டு தென்னை மரம் உயரம் அளவு உயர்ந்து பாரிய அலையாக, அழிவுப் பேரலையாக,

ஆழிப்பேரலையாக ஊருக்கு வந்ததையும் சுமத்ராவிற்கு எந்த விதத் தொடர்புமில்லாத மனிதர்கள் மாண்டதையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இந்தோனேசியா சுமத்ரா தீவின் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலத்தட்டுகள் (டெக்டானிக் பிளேட்கள்-Plate tectonics) அதில் இந்தியத் தட்டும் மியான்மர் தட்டும் கடலுக்கு அடியில் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட நிலநடுக்கமே சுனாமியாக உருவெடுத்து இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ள தமிழகம் உட்பட சில நாடுகளை 2004 ஆம் ஆண்டு தாக்கியது. 

அன்று கடலுக்கடியில் 9.1-9.3 ரிக்டர் அளவு பதிவாகிய நிலநடுக்கம் என்பதை கடல் மேற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடலாடிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கரை வந்தபிறகு அந்தப் பெரிய அழிவைக் கண்டனர். உறவுகள் மாண்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

கடற்பரப்பில் ஏற்பட்ட பெரிய அளவு நிலநடுக்கம், நிலத்தில் ஏற்பட்டிருந்தால் 

பல அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. 

சுனாமி தாக்கிய 14 நாடுகளில் இரண்டே கால் லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்து கடலூர் மாவட்டத்தில் மொத்தமாக 600 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர் அந்த எண்ணிக்கையில் தேவனாம்பட்டினம், சாமியார் பேட்டையில் தான் கூடுதலானோர் உயிரிழந்துள்ளனர்.


கடலூர்

மெரினா