ஞாயிறு, 10 மே, 2009

விவசாய படிப்பிற்கு 11ம் தேதி முதல் விண்ணப்பம்!

இளநிலை விவசாயப் படிப்பிற்கான விண்ணப்பங்கள், 11ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின், நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம் கூறியிருப்பதாவது:

விண்ணப்பக் கட்டணம் 600 ரூபாய். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சாதிச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பித்து, 300 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 'பேராசிரியர் மற்றும் தலைவர், நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம், புதிய எண் பி.44, 6வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை' என்ற முகவரியை அணுகலாம். தொலைபேசி: 26263484.

இவ்வாறு, தோட்டக்கலை வளர்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக புகார்! திருமாவளவன் மீது பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு!!

பரங்கிப்பேட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் நேரம் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டை நகர பகுதிகளில் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பரங்கிப்பேட்டை ஒன்றியமான சின்னூர், புதுப்பேட்டை, கரிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் தலைமையில் பொதுமக்களை சந்தித்து திருமாவளவன் வாக்கு சேகரித்ததாக தெரிகிறது.

அதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக பரங்கிப்பேட்டை போலீசார், விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன், ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 7 மே, 2009

அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பது எப்படி?

தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பதற்கு முக்கியமாக தேவை தேர்தல் ஆணையம் வழங்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை. ஆனால், இந்த அட்டை இல்லாமல் பல வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க சில புகைப்பட அடையாள ஆவணங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஏதாவது ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

அதன்படி வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 13 வகையான ஆவணங்களில் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

அந்த 13 ஆவணங்கள்...

  1. பாஸ்போர்ட்

  2. ஓட்டுனர் உரிமம்

  3. வருமான வரி பான் அட்டை

  4. மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய போட்டாவுடன் கூடிய அடையாள அட்டை.

  5. அரசு வங்கிகள், தபால் அலுவலகங்கள் வழங்கிய பாஸ் புக்குகள் மற்றும் விவசாயிகளுக்கான பாஸ் புக்குகள்

  6. நிலம், வீட்டு விற்பனை பத்திரங்கள், மனை பட்டா

  7. பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. சான்றிதழ்கள்

  8. ஓய்வு ஊதிய ஆவணங்கள்

  9. சுதந்திர போராட்ட வீரர்களின் அடையாள அட்டை

  10. துப்பாக்கி லைசென்ஸ்

  11. உடல் ஊனமுற்றோர்க்கான சான்றிதழ்

  12. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை

  13. மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள்.

இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். அதைக் காட்டி வாக்களிக்கலாம்.

சில நேரங்களில் குடும்பத் தலைவர் உள்பட குடும்பத்தில் வேறு சிலருக்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள், குடும்பத் தலைவர் மேற்கண்ட ஆவணங்களில் ஒன்றைக் காட்டினால் போதும், மொத்த குடும்பமும் அவருடன் சேர்ந்து வாக்களிக்கலாம். தனித் தனியாக அடையாள அட்டை தர தேவையில்லை.

இதை விட முக்கியம் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இடம் பெற்றிருப்பது. அது இல்லாமல் இதில் எதைக் காட்டினாலும் வாக்களிக்க முடியாது. எனவே முதலில் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. எனவே 13ம் தேதி மறக்காமல், புகைப்பட அடையாள அட்டை அல்லது மேற்கண்ட 13 ஆவணங்களில் ஒன்றுடன் முதல் வேலையாக போய் ஓட்டுப் போட்டு விட்டு வந்து விடுங்கள்.

Source: தட்ஸ் தமிழ்